கோடீஸ்வரி திரிஷா!
திரிஷா கோடீஸ்வரியாகி விட்டார். அதாவது அவரது சம்பளம் 1 கோடியைத் தொட்டு விட்டதாம்.
தென்னிந்திய திரையுலகின் அசைக்க முடியாத நம்பர் ஒன் நாயகியாக இருக்கிறார் திரிஷா. அவருடை இடத்தைப் பிடிக்க பல நடிகைகளும் பிரம்மப் பிரயத்தனம் செய்த போதிலும் இதுவரை அவரது இடை அசைவுக்குப் பக்கத்தில் கூட போக முடியவில்லை.இந்தியாவின் பண வீக்கம் நாளுக்கு நாள் உயர்வதைப் போல படத்துக்குப் படம் திரிஷாவின் சம்பளமும் எகிறிக் கொண்டுள்ளது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நடித்த ஸ்டாலின் வெற்றி பெற்றவுடன் 50 லட்சமாக தனது சம்பளத்தை உயர்த்தினார் திரிஷா.
உனக்கும் எனக்கும் சூப்பர்ஹிட் ஆனவுடன் அவரது சம்பளம் 60 லட்சமாக உயர்ந்தது. இப்போது செல்வராகவன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள அடவரி மடலுகு அர்த்தலே வெருளே பம்பர் ஹிட் ஆகி விட்டதால் திரிஷாவின் நிலை மேலும் வலுவடைந்து, உறுதியடைந்து எஃகுத்தனமாக மாறியுள்ளதாம்.
அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிப்பில், விஜய்யுடன் இணைந்து திரிஷா நடிக்கவுள்ள படத்தில் அவரது சம்பளம் ரூ 1 கோடியாம். இந்தியத் திரையுலகில் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்னர் அதிக சம்பளம் பேசப்பட்ட நடிகை திரிஷாதானாம்.
இப்போதைக்கு திரிஷா கையில் இரண்டு படங்கள்தான் உள்ளது. ஒன்று விஜய்யுடன் இணைந்து நடிக்கவுள்ள படம், இன்னொன்று ரஜினியின் அடுத்த படமாக இருக்கலாம்.
தன்னைத் தேடி வந்த, ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களை ரஜினி படத்துக்காக வேண்டாம் என்று கூறி தனது கால்ஷீட்களை வேகன்ட் ஆக்கி வைத்துள்ளாராம் திரிஷா.


Click it and Unblock the Notifications











