வித்தியாசமாக நடிக்கும் வித்யா பாலனுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
மும்பை: பாலிவுட் நடிகை வித்யா பாலனின் கலை சேவையை பாராட்டி ராய் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
கான்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பாலிவுட்டில் அவர்களுக்கு நடிப்பில் போட்டி கொடுத்தவர் வித்யா பாலன். பாலிவுட்டில் கான்கள் வெற்றிகரமாக உள்ள நிலையில் உங்கள் பெயரில் கான் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்கள் பெயரில் கானை சேர்ப்பீர்களா என்று கேட்டதற்கு வேண்டுமானால் அவர்கள் தங்களின் பெயரில் பாலனை சேர்க்கட்டும் என்று தில்லாக கூறியவர் வித்யா பாலன்.
நிஜத்திலும், படங்களிலும் வித்தியாசமான வித்யா பாலனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

டாக்டர்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ராய் பல்கலைக்கழகம் வித்யா பாலனின் கலைச் சேவையை பாராட்டி மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

வித்யா
இந்த கௌரவ டாக்டர் பட்டத்தை பெற்றதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. நான் சினிமா துறைக்கு வந்து இந்த ஆண்டுடன் 10 ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் இந்த கௌரவும் கிடைத்துள்ளது என்று வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

கணவர்
வித்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய நிகழ்ச்சியில் அவரின் கணவரும், பாலிவுட் தயாரிப்பாளருமான சித்தார்த் ராய் கபூர் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

சமூகம்
வித்யா பாலன் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரங்கள் அனைத்தும் சமூகத்தில் உள்ள வலுவான பெண்களை குறிக்கும் வகையில் உள்ளன. நடிகைகள் மத்தியில் வித்தியாசமானவர் வித்யா என ராய் பல்கலைக்கழக துணை வேந்தர் ஹர்பீன் அரோரா தெரிவித்துள்ளார்.

பத்மஸ்ரீ
2011ம் ஆண்டு டர்ட்டி பிக்சர் படத்திற்காக வித்யா பாலனுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து கடந்த 2014ம் ஆண்டு அவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











