நித்யாமேனன் கூட ஓகே.. ஆனா, கங்கணா அதுக்கு சரிப்பட்டு வருவாங்களானு தெரியலையே!
விஜய் இயக்கும் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்க இருக்கிறார்.
சென்னை: விஜய் இயக்கத்தில் தயாராகும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பல இயக்குநர்கள் போட்டி போட்டது ஏற்கனவே நாமறிந்தது தான். பிரியதர்ஷினி இயக்கும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதாவாக நித்யாமேனன் நடிக்கிறார் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் பிறந்தநாளை யொட்டி இயக்குநர் விஜய், தான் இயக்கும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில், ஜெயலலிதாவாக கங்கணா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தாம் தூம் நாயகி:
பாலிவுட்டில் பல வெற்றிப் படங்களில் நடித்து, விருதுகளைக் குவித்து வருபவர் கங்கணா. தாம் தூம் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் ரசிகர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர் தான். ஆனால், தொடர்ந்து தமிழில் அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. அதற்குக் காரணம் அவரது மிகவும் மெலிந்த தேகம் என்றே கூறலாம்.

மீண்டும் தமிழ்ப்படம்:
தமிழ் ரசிகர்களுக்கு பொதுவாகவே சற்று பூசியது போன்ற உடல்வாகு கொண்ட நடிகைகளைத் தான் பிடிக்கும். இதனாலேயே திறமையான நடிகையாக இருந்தபோதும், கங்கணாவிற்கு அடுத்து தமிழ்ப் படங்கள் அமையவில்லை. இந்த சூழ்நிலையில் தான் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படம் மூலம் மீண்டும் அவர் தமிழுக்கு வருகிறார்.

நித்யாமேனன்:
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கும் போது, பெரும்பாலும் சம்பந்தப்பட்டவர்களின் முகம் மற்றும் உடல் சாயலில் இருப்பவர்களைத் தான் அந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்வர். அந்தவகையில் சிறுவயதில் இருந்தே சற்று பூசினாற் போன்ற உடல்வாகு கொண்ட ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு நித்யாமேனன் தேர்வு சரியானதாகவே கருதப்பட்டது.

சந்தேகம்:
ஆனால், கங்கணா எப்படி அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்துவார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. விஜய் தனது படத்தில் வித்யாபாலன் அல்லது அனுஷ்காவைத் தான் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென அவர் கங்கணா பெயரை அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செய்து காட்டிய கீர்த்திசுரேஷ்:
ஆனால், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கிய போது, கீர்த்தி சுரேஷும் இதே போன்ற சர்ச்சையில் சிக்கினார். அவர் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருந்த மாட்டார் என்பதே பலரது கருத்தாக இருந்தது. ஆனால் அவர்களது கருத்தை தவிடுபொடியாக்கி, நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி, அவராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கீர்த்தி சுரேஷ். தற்போது அதேபோல், கங்கணாவும் செய்து காட்டுவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











