பெண் கொடுமைக்கு எதிரான பிரசாரத்தில் நிக்கோல் கிட்மேன்

ஐ.நா. மகளிர் வளர்ச்சி நிதியத்தின் தூதுவராக செயல்படுகிறார் கிட்மேன். இந்த அமைப்பின் சார்பில் உலகம் தழுவியஅளவில் பெண்களுக்கு எதிரான கொடுமையைக் கண்டித்து ஆன்லைன் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பிரசாரத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் கிட்மேன். இதுகுறித்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிய வேண்டும். இத்தகைய கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் ஒரே குரலில் எதிர்ப்பு எழ வேண்டும்.
ஒவ்வொருவரும் கொடுக்கும் ஆதரவுக் குரல் முக்கியத்துவம் பெறும். இந்த இயக்கத்திற்கு ஆதரவாக நிதியளிப்பு செய்யும் ஒவ்வொருவரின் பணமும் முக்கியத்துவம் பெறும்.
இரு குழந்தைகளின் தாய் என்ற முறையில், எனது குழந்தைகளும், உலகில் உள்ள பிற குழந்தைகளும் எதிர்காலத்தில் இத்தகையை கொடுமைகளைக் காணக் கூடாது என்ற ஆதங்கத்தில் இந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளேன். அவர்கள் சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்றார் கிட்மேன்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் பிரசாரம் தொடங்கியது. "Say NO to violence against women" என்பதே அந்த ஆன்லைன் பிரசாரத்தின் ஒரு வரி கோரிக்கை. இதற்கு இதுவரை 2 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர்.
தனி நபர்கள் தவிர பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும் கூட இந்த பிரசாரத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. செனகல் நாட்டு அதிபர் உள்பட அந்நாட்டு அமைச்சர்களும் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











