பிரபல பாடகியை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட மர்ம நபர்!
லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவின் பிரபல பாடகியான கிறிஸ்டினா கிரிம்மி மர்மநபர் ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
22 வயதான கிறிஸ்டினா கிரிம்மி அமெரிக்காவின் பிரபல பாடகிகளில் ஒருவர். மேலும் தி வாய்ஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போட்டியாளராகவும் இருந்தார்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி ஒன்றை நடத்திய கிறிஸ்டினா ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் கிரிஸ்டினாவை சராமாரியாக சுட்டார்.
துப்பாக்கி சூட்டால் பலத்த காயமடைந்த கிறிஸ்டினா அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரது உயிரை மருத்துவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
முன்னதாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை கிறிஸ்டினாவின் சகோதரர் மார்கஸ் கிரிம்மி தடுத்து நிறுத்த முயன்றபோது, அவன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்து விட்டான்.
தற்போது போலீசார் நடத்திய விசாரணையில் கிறிஸ்டினாவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நபரின் பெயர் கேவின் ஜேம்ஸ் லோயபல் என்பது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் '' ஜேம்ஸ் எதற்காக கிறிஸ்டினாவை சுட்டுக் கொன்றான் என்பது தெரியவில்லை. இருவருக்கும் இடையில் எந்த முன் விரோதமும் இருந்ததாக தெரியவில்லை.
அவனிடம் துப்பாக்கி எப்படி வந்தது. அவன் எதற்காக கொலை செய்தான்? என விசாரணை நடத்தி வருகிறோம்'' என்று கூறியுள்ளனர். கொலையாளியும் இறந்து விட்டதால் இந்த வழக்கு தற்போது மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











