அட அவருக்கும் கொரோனா பாதிப்பாம்.. பின்ன பொம்பளைங்க பாவமும் சாபமும் சும்மா விடுமா!
சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன். இவர் மிராமேக்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார்.
இவர் செக்ஸ் லைஸ் அன்ட் வீடியோ டேப், தி கிரையிங் கேம், பல்ப் பிக்ஷன், ஹெவன்லி கிரியேட்சர்ஸ் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்துள்ளார். ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் வெய்ன்ஸ்டீன்.

பாலியல் பலாத்காரம்
இந்நிலையில் இவர் தன்னிடம் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கும் தனது தயாரிப்பில் நடிக்கும் நடிகைகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பல பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்பட்டது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட 80க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் அவர் மீது புகார் தெரிவித்திருந்தனர்.

போலீசார் விசாரணை
இதேபோல் அவரது தயாரிப்பு நிறுவனமான மிராமேக்ஸில் பணிபுரிந்த பெண் ஊழியர்களும் ஹார்வி வெய்ன்ஸ்டீன் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறினர். மீடூவில் பல நடிகைகளும் மாடல் அழகிகளும் அவர் மீது புகார் கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரைக்கர்ஸ் தீவு சிறை
ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. 68 வயதான ஹார்வி வெய்ன்ஸ்டீனை குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் அவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனை தொடர்ந்து ரைக்கர்ஸ் தீவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார் ஹார்வி வெய்ன்ஸ்டீன்.

கொரோனா உறுதி
இந்நிலையில் தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நியூயார்க் சிட்டியின் வட மேற்கில் 560 கிலோ மீட்டர் தொலைவில் பஃபலோ பகுதிக்கு அருகில் உள்ள சிறைக்கு வெய்ன்ஸ்டீன் மாற்றப்பட்டுள்ளார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை
இதுகுறித்து பேசியுள்ள நியூயார்க் போலீஸ் நலச்சங்கத்தின் தலைவர் மைக்கேல் பவர்ஸ, 68 வயதான வெய்ன்ஸ்டீன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என கூறியிருக்கிறார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகளுக்கு சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். வெய்ன்ஸ்டீடன் தொடர்பில் இருந்த சிறைத்துறை ஊழியர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

417 பேர் பலி
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ்க்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 33000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா வைரஸ் 417 பேரை பலி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











