பால் வாக்கர்... ஒரு நடிகனின் பெருமைக்குரிய மறுபக்கம்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: சமீபத்தில் கார் விபத்தில் இறந்து போன பால் வாக்கரின் மரணம் உலகம் முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் அவர் செய்த நல்ல விஷயங்கள் அனைத்தையும் படங்களோடு வெளியிட்டு, அந்த நல்ல கலைஞருக்கு தங்கள் மரியாதையைச் செலுத்தி வருகின்றன மீடியாக்கள்.
ஒரு திறமையான நடிகர் என்பதைத் தாண்டி, அவர் செய்துள்ள நல்ல விஷயங்களில் முக்கியமானது, சுனாமி பாதித்த பகுதிகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டி ஏராளமான உதவிகளை நேரடியாகப் போய்ச் செய்தது.
பாதிக்கப்பட்ட ஹைடி, சிலி போன்ற பகுதிகளில் தனது ரீச் அவுட் வேர்ல்ட்வைட் மூலம் உதவிகள் செய்தவர், சமீபத்தில் சூறாவளி பாதித்த பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களுக்கும் உதவியுள்ளார்.

நல்ல இதயத்தை இழந்தோம்
பால் வாக்கர் செய்த உதவிகள் குறித்து, அவரது அறக்கட்டளையின் மேலாளரான ஜேடி டார்ப்மேன் கூறுகையில், "ஒரு நல்ல இதயத்தை, மனிதனை நாம் இழந்துவிட்டோம். இந்த இளம் வயதில் ஒரு சகாப்தமாகவே அவர் மறைந்திருக்கிறார்," என்றார்.

என் மகனின் விருப்பம்...
'என் மகன் எவ்வளவோ உதவிகள் செய்திருக்கிறான். அந்த உதவிகளின் அளவை அதிகப்படுத்திக் கொண்டே செல்வதுதான் இனி செய்ய வேண்டியது. அதுதான் அவன் விருப்பமும் கூட,' என்கிறார் கலங்கிய கண்களுடன், பால் வாக்கரின் தந்தை சீனியர் வாக்கர்.

உலகின் பெரிய இழப்பு
பால் வாக்கரை வைத்து ஃபாஸ்ட் அன்ட் ப்யூரியஸ் எடுத்த யுனிவர்சல் ஸ்டுடியோவின் தலைவர் டோன்னா லாங்லி கூறுகையில், "பால் வாக்கரின் மரணத்தால், இந்த உலகம் மனித குலத்துக்கு சேவையாற்றும் ஒரு நல்ல மனிதரை இழந்து நிற்கிறது," என்றார்.
கடந்த மூன்றாண்டுகளாக ஹைடி, சிலி, அலபாமா போன்ற பகுதிகளில் சுனாமியாலும் சூறாவளியாலும் பாதிக்கப்பட்ட பல நூறு மக்களுக்கு தற்காலிக மருத்துவமனைகள், தங்குமிடங்கள் அமைத்துக் கொடுத்து உதவியுள்ளார் பால் வாக்கர். அந்த விவரங்களெல்லாம் இப்போதுதான் வெளியில் தெரிய வந்துள்ளன.

தனி ஹெலிகாப்டர்
ஹைடி தீவின் தொலைதூரப் பகுதிகளில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தனி ஹெலிகாப்டரை வரவழைத்து, 34 மணிநேரம் தனது வாலன்டியர்களுடன் போய் உதவிகள் வழங்கியுள்ளார் பால் வாக்கர். அந்தப் படங்களையெல்லாம் இப்போது வெளியிட்டு நெகிழ வைத்துள்ளனர், பால் வாக்கருக்கு உதவியாக நின்ற தன்னார்வலர்கள்.

சிலி கடற்கரைகளில்...
ஹைடியில் வந்த சூறாவளி, இரண்டு மாதங்கள் கழித்து இன்னும் பலமாய் சிலியின் கடற்கரையோர பகுதிகளைத் தாக்கியது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். உடனே தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சிலி கடற்கரையில் தற்காலிக மருத்துவமனைகளை அமைத்து உதவினார் வாக்கர்.

அலபாமாவில்...
2011-ம் ஆண்டு அலபாமாவில் சூறாவளியின் தாக்கம் படுமோசமாக இருந்தது. ரசிகர்கள், நண்பர்கள் என எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்துக்குப் போய் நின்ற வாக்கர், தானே முன்னின்று பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் இடிபாடுகளை அகற்றி, பல ஆயிரம் டாலர் செலவு செய்து குடியிருப்புகள் கட்டிக் கொடுத்தார்.
இதேபோல அரிசோனாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் தீயணைப்பு வீரர்களைக் காப்பதிலும் பால் வாக்கரின் அமைப்பு உதவியுள்ளது.

விளம்பரமின்றி...
பால் வாக்கர் செய்த பல உதவிகளும் இப்போதுதான் வெளியில் தெரிய வந்துள்ளது. காரணம், அவர் எதையும் விளம்பரமோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் செய்து வந்ததுதான். 'பால் வாக்கருக்கு நாங்கள் செய்யும் மரியாதை, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் பாணியிலேயே தொடர்வதுதான்," என்கிறார்கள் Reach out World அமைப்பினர்.

ராணுவ வீரர் தம்பதிக்கு வாக்கர் தந்த பரிசு
அது 2004 ம் ஆண்டு... ஈராக் போர் முனையிலிருந்து திரும்பியிருந்தார் ஒரு ராணுவ வீரர். சான்டா பார்பரா நகைக் கடைக்குள் நுழைந்த அந்த ராணுவ வீரர் தனது காதலிக்கு திருமண நிச்சயதார்த்தத்துக்காக ஒரு வைர பிரேஸ்லெட் வாங்க தேடினார். ஆனால் ஏக விலை சொன்னார்கள். 9 ஆயிரம் டாலர். வாங்க மனமின்றி திரும்பியவர், பால் வாக்கர் அதே கடையில் இருப்பதை அறிந்து அவரைப் போய் காதலியுடன் சந்தித்துவிட்டு வெளியில் வந்தார்.
அடுத்த சில நிமிடங்களில் கடை ஊழியர்கள் ஓடி வந்த அந்த ராணுவ வீரரையும் அவர் காதலியையும் அழைத்தார்கள். அவர்கள் பார்த்து விலை அதிகம் என வைத்துவிட்டுப் போன அதே வைர பிரேஸ்லெட்டை, இருவர் கையிலும் கொடுத்தார்கள். காதலர்கள் திகைத்து நிற்க, இது பால் வாக்கரின் பரிசு என்று கூறினார்கள் கடைகாரர்கள்.
இந்த நிகழ்ச்சியை கண்ணீர் மல்க விவரிக்கிறார் அந்த ராணுவ வீரர். அவர் பெயர் கைல்.


Click it and Unblock the Notifications











