தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி

By Shankar

Sneha
நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆதர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போலத்தான் என் திரைப்பிரவேசம் அமைந்தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினைப்பது, ராதிகா மேடத்தை பார்த்துதான். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணிச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவால்களை அவர் சந்திக்கும் பாங்கு... எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணிச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நிறைய மாற்றிவிட்டன. இன்றை பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில்லை. வருவது வரட்டும் என துணிந்து நிற்கிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. என் சுபாவத்தை மாற்றுவதில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே... அடுத்தடுத்த படங்கள் என்ன?

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிருக்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் இடைவெளி ஏதும் தெரிவதில்லை.

நமக்கான பாத்திரம், திறமைக்கேற்ற வேடம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கேள்விதான்... ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னைப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசுக்கள் வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்களே என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், இப்போதெல்லாம் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண்டிகையின்போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன... எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X