விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டமில்லை: எஸ்.ஏ. சந்திரசேகர் பேட்டி

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வரும் 28-ம் தேதி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது.
இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. அரசியலில் இருந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்றில்லை. வேலாயுதம் வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி அல்லது தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். தமிழகத்தில் ஆட்சி மாறிய பிறகு தான் திரைத்துறைக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.
கடந்த ஆட்சியில் ஒரு சில நடிகர்கள் தான் கஷ்டப்பட்டார்கள் என்று கூற முடியாது. ஒட்டு மொத்த திரையுலகமே கட்டுண்டு கிடந்தது.
நடிகர் விஜய் மாதாமாதம் மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கடந்த மாதம் சேலத்தில் பிரமாண்டமான நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இந்த மாதம் வரும் 28-ம் தேதி மதுரை புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தொண்டரணி தலைவர் மகேஸ்வரன், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் 1992-ம் ஆண்டு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். முதலில் ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. அது நற்பணி இயக்கமாகவும், தற்போது மக்கள் இயக்கமாகவும் மாறியுள்ளது. இது ஏழைகளுக்காகவும், தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதோடு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். இன்னும் பல நல்ல காரியங்களை செய்து வருகிறோம்.
விஜய்க்கு எம்.ஜி.ஆர். என்றால் ரொம்ப இஷ்டம். அவர் நடிகனாக வாழ்க்கையைத் துவங்கி, முதல்வராகி உலகை விட்டு மறைந்தும் மக்கள் மனதில் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும்.
அவரை ரோல் மாடலாக வைத்து தான் விஜய்யும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார் என்றார்.


Click it and Unblock the Notifications











