தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூல் செய்யாதது ஏன்.. ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன காரணம்!
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்னும் சில தினங்களில் படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளை தொடங்கிய உள்ள ஏ.ஆர்.முருகதாஸ், படம் குறித்து பல விஷயத்தை பேசி வருகிறார். ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூலிக்காததற்கான காரணத்தை கூறியுள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி, சர்கார் என பல வெற்றிப்படத்தை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார். இவர் இயக்கிய 'கஜினி' படம் ஹிந்தித் திரையுலகத்தில் 100 கோடியை வசூலித்தது. அதன்பின் அவர் இயக்கிய 'அகிரா, ஸ்பைடர் போன்ற திரைப்படங்கள் தோல்வி அடைந்தன. இவர் கடைசியாக பாலிவுட் ஸ்டார் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கினார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான போதும், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

ஏ.ஆர்.முருகதாஸ்: மதராஸி படம் குறித்து பல விஷயத்தை ஏஆர்.முருகதாஸ் பேசி வருகிறார். அந்த வகையில் காதல் கலந்த ஆக்ஷன் படம் என்று சொல்லியிருக்கிறார். அதாவது 'மதராஸி' படம் காதலை மையப்படுத்தி நடக்கும் பெரிய ஆக்ஷன் கதை அம்சத்தை கொண்ட படமாக இருக்கும். 'கஜினி' படம் போலவே இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். ஆனால், இதில் காதல் தான் மையப்புள்ளியாக இருக்கும், கஜினி படம் போல இந்த படமும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்றார். இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 22ந் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
காரணம் இதுதான்: இதைத்தொடர்ந்து செய்தியாளர், கன்னடம், இந்தி, தெலுங்கு படங்கள் ஆயிரம் கோடியை வசூலித்துவிட்டன. ஆனால், தமிழ் படங்கள் ஒன்று கூட ஆயிரம் கோடி வசூலை எட்டவில்லை அதற்கு என்ன காரணம் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், மற்ற மொழி படங்கள் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் செய்வதற்கு முக்கிய காரணம், அந்த திரைப்படத்துறை இயக்குனர்கள் பொழுதுபோக்குக்காக மட்டுமே படத்தை எடுக்கிறார்கள். ஆனால், தமிழ் இயக்குனர்கள் படத்தின் மூலம் கல்வியை கற்பிக்கிறார்கள், சமூக கருத்துக்களை சொல்லும் வகையில் படத்தை எடுக்கிறார்கள். இதுதான், மற்ற திரைப்படத் துறைகளுக்கும் தமிழ் திரைப்படத் துறைக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமாக பார்க்கப்படுகிறது. இதுதான் தமிழ் படங்கள் ரூ.1,000 கோடி வசூலிக்காததற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என ஏ.ஆர்.முருகதாஸ் பதில் அளித்தார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே முன் பதிவில் மாஸ் காட்டியதால், இந்த படம் நிச்சயம் ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றதால், ஆயிரம் கோடி வசூலை எட்டமுடியாமல் போய் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில், நாகார்ஜுனா, மலையாள நடிகர் சோபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











