நான் நல்ல நடிகன் இல்லை..!!!: கிஷோர்

By Chakra

கிஷோர்... உங்களை மீட் பண்ணனுமே...

நீங்க எங்க இருக்கீங்க.. நானே வந்துர்றேன்...

அடுத்த ஒரு மணி நேரத்தில் மிலிட்டரி கிரீன் ராயல் என்பீல்டில் நமது அலுவலக வாசலில் வந்து இறங்கினார், பேக் பேக்கோடு.. ஒரு கல்லூரி மாணவன் மாதிரி.

ஒரு நடிகனுக்கு உரிய எந்த பந்தாவும், அடையாளமும் காட்டிக் கொள்ளாத 'டவுன் டு எர்த்' மனிதர் கிஷோர்.

காலேஜ் பையன் மாதிரி இருக்கீங்களே கிஷோர்..

இப்படித்தான் சார், எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கேன்...!

பேச்சிலும் பாவனையிலும் அநியாயத்துக்கு அடக்கம் காட்டுகிறார். நடிப்பு என்று வந்துவிட்டால் உங்களுக்கே தெரியும் இவர் எப்படி என்று.

தெளிவான ஆங்கிலம், தெளிவான தமிழ் என இரு மொழிகளிலும் நல்ல கமாண்ட். ஹரிதாஸ் படத்துல தான் நான் முதல் முதலாக ஒழுங்கான தமிழ் பேசியதாக என் மனைவி சொன்னார் என்று சொல்லி சிரிக்கிறார்.

இவரது மனைவி சேலத்துக்காரராம். கிஷோருக்கு பூர்வீகம் பெங்களூர்.

படிக்கும்போதே காதல், படிப்பு முடித்தவுடன் கல்யாணம்.. ஒழுங்கான வேலை இல்லாததால் குடும்பம் நடத்த கஷ்டம்.. வீட்டில் வசதியானவர்கள் தான் என்றாலும் அவர்களது பணத்தில் வாழப் பிடிக்காமல் தனக்குத் தெரிந்த ஸ்கெட்ச் ஒர்க்களில் இறங்க, அதன் மூலம் பேஷன் டிசைனாராகியுள்ளார்.

சிறிது காலம் பேஷன் டிசைனிங், அப்படியே பெண்கள் கல்லூரியில் லெக்சரர் என்றிருந்தவருக்கு கல்லூரி நாட்களில் இருந்த நாடக ஆர்வம் சினிமா பக்கம் கொண்டு போயுள்ளது.

முதலில் கன்னடத்தில் சில படங்களில் தலைகாட்டியவரை, தமிழுக்கு இழுத்து வந்தவர் இயக்குனர் வெற்றி மாறன்.

வெற்றிமாறன் முதலில் இயக்க இருந்த ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நானா படேகரை நடிக்க வைக்க இருந்ததாம். ஆனால், தயாரிப்பாளர் மாறிவிட, பட்ஜெட் சுருங்கவே, நானா படேகருக்கு சம்பளம் தர முடியாது என்ற நிலையில் என்னைக் கூப்பிட்டார்கள் போலிருக்கிறது என்று சிரிக்கிறார் கிஷோர்.

வெற்றிமாறன் கிஷோரின் நடிப்பைப் பார்த்து அசந்தே கூப்பிட்டார் என்பது வேறு விஷயம்.

ஆனால், அந்தப் படம் தள்ளிப் போய்விட, தனது பொல்லாதவன் படம் மூலம் கிஷோரை தமிழுக்குக் கொண்டு வந்துள்ளார் வெற்றிமாறன். முதலில் வெற்றிமாறனும் தனுஷும் என்னுடன் போனில் பேசி, நீங்க நடிக்கிறீங்க என்று சொன்னபோது நான் நம்பவில்லை என்கிறார்.

இதையடுத்து ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக் குழு, தோரணை, முத்திரை, போர்க்களம், ஆடுகளம், ஹரிதாஸ் என கிஷோரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இரு குழந்தைகளுக்கு தந்தையான கிஷோருக்கு மது, சிகரெட் பழக்கம் இல்லை. ஒர்க் அவுட் செய்வீங்களா என்று கேட்டதற்கு, நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை மட்டும் தான் செய்வேன் என்கிறார். அவரது உடலைப் பார்த்தாலே அது தெரிகிறது.

படங்களில் காட்டும் கோப முகம் படத்துக்கு மட்டும் தான் போலிருக்கிறது. நேரில் சிரிப்பும், தோழமையும் இயற்கையாகவே அமைந்த மனிதர்.

பெங்களூரில் பண்ணரகட்டா அருகே உள்ள தனது குடும்ப நிலத்தில், இயற்கை விவசாயத்தில் (organic forming) ஈடுபடுவது இவருக்கு மிகப் பிடித்த வேலையாம். இயற்கை விவசாயம் தான் நிஜமான விவசாயம் என்கிறார். உரங்களும் வேதிப் பொருட்களும் நமது உணவை சீரழித்துவிட்டன என ஆதங்கப்படும் இவருக்கு இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை குறைந்த விலைக்கு விற்க ஆசையாம். லாபம் இல்லாட்டியும் பரவாயில்லை, நஷ்டம் இல்லாத வித்தா போதும் என்கிறார்.

உர மானியம், விவசாயத் திட்டங்களில் நடக்கும் ஊழல், பன்னாட்டு உர நிறுவனங்களின் 'கார்டெல்' குறித்துப் பேசும்போது மட்டும் சினிமாவில் பார்க்கும் அந்த கோப முகத்தைக் காட்டுகிறார் கிஷோர். தமிழகத்தின் முன்னணி இயற்கை விவசாயியான நம்மாழ்வாரைப் பற்றி சிலாகிக்கிறார்.

நான் நல்ல கேரக்டர் என்று நினைக்கும் ரோல்களை மட்டும் தான் செய்கிறேன் என்று சொல்லும் கிஷோருக்கு காமெடி ரோல் செய்யவும், வரலாற்றுப் பின்னணி கொண்ட பீரியட் பிலிம் செய்யவும் ஆசையாம்.

திப்பு சுல்தான் கேரக்டரை வைத்து ஒரு படம் எடுக்க சில நண்பர்களுடன் சேர்ந்து முயற்சித்து வருகிறாராம். அது தான் என் ட்ரீம் பிலிம் என்கிறார்.

நான் மிகவும் கூச்சத்தோடு நடித்த காட்சி, ஹரிதாஸ் படத்தில் ஸ்னேகாவை பெண் பார்க்கச் செல்லும் காட்சி தான். படத்தில் முதல் காட்சியாகவே இதைத் தான் எடுத்தார்கள். நான் ஹீரோயின்களோடு ஜோடி போட்டு நடித்தது ரொம்ப கம்மி. ஸ்னேகாவுடன் நடிக்க வேண்டும், அவரைப் பெண் பார்க்கச் செல்லும் வெட்கத்தை வேறு முகத்தில் காட்ட வேண்டும் என்றவுடன் உண்மையிலேயே ரொம்ப வெக்கமா இருந்தது என்று சொல்லி மனம் திறந்து சிரிக்கிறார் கிஷோர்.

சினிமாவுக்கு சமூக அக்கறை இருக்க வேண்டும் என்று சொல்லும் கிஷோர், தமிழின் புதிய இயக்குனர்கள், புதிய சிந்தனைகள், வித்தியாசமான படங்களை பாராட்டித் தள்ளுகிறார். தொடர்ந்து நல்ல படங்களாக எடுத்து ரசிகர்களின் ரசிப்புத் தரப்த்தை புதிய இயக்குனர்கள் உயர்த்திவிட்டார்கள். இது இப்போதைய தமிழ் சினிமாவின் மாபெரும் சாதனை என்கிறார். கன்னடப் படங்களின் தரம் உயரவில்லை என்பதையும் கவலையோடு சுட்டிக் காட்டுகிறார்.

வனயுத்தம் படத்தில் வீரப்பனாக நடித்தது பெரிய சவாலான காரியமாக இருந்ததாம். வீரப்பன் வசித்த மாதேஸ்வரன் மலைப் பகுதியில் தான் முழு சூட்டிங்கும் நடந்தது. வீரப்பன் கேரக்டருக்காக எனது உடலை மேலும் மெலிய வைக்க வேண்டி வந்தது. படம் நன்றாக வந்ததில் எல்லோருக்குமே சந்தோஷம்.

அடுத்து அஜீத்தின் வலை படத்திலும் நடித்து வரும் கிஷோர், அஜீத்தை மிகச் சிறந்த ஜென்டில்மேன், மிக நேர்மையான மனிதர் என்கிறார். அதே போல உதயம் தேசிய நெடுஞ்சாலை 4. பரிமளா தியாகரங்கம், பொன்மாலைப் பொழுது ஆகிய தமிழ்ப் படங்களிலும் 2 தெலுங்கு, ஒரு கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சரி பைக்ல சுத்துறீங்களே, ரசிகர்கள் தொல்லை எல்லாம் இல்லையா என்று கேட்டால், அது எல்லாம் ஸ்டார்களுக்குத் தான். நான் தான் ஸ்டார் இல்லையே, வெறும் நடிகன் தான். அதுவும் நல்ல நடிகன் கூட இல்லை!.. சென்னையில் ஆட்டோவில் தான் பெரும்பாலும் சுத்துவேன். என்னை யாரும் பெரிய நடிகரா எல்லாம் பார்ப்பது இல்லை. பார்த்தாலும் இவன் கிஷோரா இருக்க மாட்டான், அவனை மாதிரி இருக்கான் என்று நினைத்து சென்று விடுகிறார்கள் என்று சொல்லி மீண்டும் சிரிக்கிறார்.

பொல்லாதவன், ஜெயம் கொண்டான், சிலம்பாட்டம், வெண்ணிலா கபடிக் குழு, தோரணை, முத்திரை, போர்க்களம், ஆடுகளம், ஹரிதாஸ் என கிஷோரின் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது அலுவலத்தில் கிஷோர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X