என் அப்பா என் கல்யாணத்தை ஏத்துக்கல.. காதலை எதிர்த்தார்.. சரத்குமார் சொன்ன அந்த விஷயம்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் டிராவிட் நடித்துள்ள திரைப்படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைப்பாளராக இந்த படத்தின் மூலம் அறிமுகமாகி உள்ளார். இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரூ.100 கோடியை வசூலித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படங்களை விட இந்த படம் அதிக வசூலை அள்ளி உள்ளது.
பெண்களுக்கு தாலி முக்கியம் இல்ல, பெண்ணோட மனசு தான் முக்கியம் என்று அழுத்தம் திருத்தமாக இந்த திரைப்படத்தில் பேசி இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஆணவக் கொலை பற்றிய அவர் பேசிய வசனங்கள் சமூக வலைத்தளங்கள் ட்ரெண்டாகி வருகிறது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் பிரதீப் ரங்கநாதனின் நடிப்பையும், அறிமுகம் இயக்குனர் கீர்த்தீஸ்வரனையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் நூறு கோடி வசூலை அள்ளி உள்ளது.

சரத்குமார் பேட்டி: டியூட் படம் குறித்து சரத்குமார் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி அளித்துள்ளார். அதில், படத்தைப் பார்த்த பலரும் ஒருவரை திருமணம் செய்து கொண்டு. வேறு ஒருவருடன் வாழ்வது என்ன கலாச்சாரம் என்று விமர்சனம் செய்து வருகிறார்கள். கீர்த்தீஸ்வரன், சரத்குமாரால், சமூக மாற்றத்தை கொண்டுவர முடியாது? இன்றைய காலகட்டத்தில் 'பப்' கலாச்சாரம் இருக்கிறது, சோஷியல் டிரிங்கிங் என்று அனைவரும் மது அருந்துகிறார்கள். மதுவின் கேடுகளை எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்பதில்லை.
என் காதலை அப்பா ஏற்கவில்லை: எது சரி, எது தவறு என்று அவர்களாகவே தெரிந்து செயல்படுகிறார்கள். இதனால், இளைஞர்கள் மீது அனைத்தையும் திணிக்க முடியாத சூழ்நிலையில் தான் நாம் இப்போது இருக்கிறோம். ஒரு காலத்தில் காதல் திருமணத்தையே யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரே ஜாதியாக இருந்தாலும், காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத காலகட்டம் இருந்தது. நான் காதலித்து திருமணம் செய்த போது கூட என்னுடைய காதலை என் அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை. என்னுடைய திருமணத்திற்கு கூட அவர் வரவில்லை. வரலட்சுமி அம்மாவை நான் திருமணம் செய்த போது என்னுடைய அப்பா அதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜாதியையோ. மதத்தையோ என் அப்பா நம்ப கூடியவர் இல்லை. என்னுடைய சான்றிதழில் மனித ஜாதி என்று எழுதினார். அப்படிப்பட்ட ஒருத்தர், என்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.
திருமணத்திற்கு வரவில்லை: நான் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதியாக இருந்தார். இதனால் அவர் திருமணத்திற்கு வரவில்லை. ஜாதியே இல்லை என்று சொன்ன என்னுடைய அப்பா ஏன் திருமணத்திற்கு வரவில்லை. என்னுடைய அப்பா காதல் திருமணத்திற்கு எதிரானவராக இருந்தார். அதனால் அவர் என்னுடைய காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால், சாதி மாறி திருமணம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக சிலர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை மாற்ற முடியுமா என்ற சிந்தனையைக் கொண்டது தான் டியூட் திரைப்படம் என்று சரத்குமார் தனது பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











