Ajith Kumar Interview: ஜாக்கிரதை.. எனது 33 வருட சினிமா வாழ்க்கையை.. பேட்டியில் பளிச்சுனு உடைத்த அஜித்!
சென்னை: நடிகர் அஜித் குமார் கடந்த ஒரு ஆண்டாக சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி தனது அஜித் குமார் ரேஸிங் அணியின் உரிமையாளராகவும் கேப்டனாகவும் சர்வதேச அளவில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயங்களில் கலந்து கொண்டு வருகிறார். இதன் மூலம் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார். இப்படி இருக்கும்போது அஜித் குமார் பிரபல ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில் பல சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அதில் ஒரு சிலவற்றது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பு பணிகள் டப்பிங் பணிகள் என எல்லாவற்றையும் முடித்துக் கொடுத்துவிட்டு தனது கார் ரேஸிங் அணியில் கவனம் செலுத்த சென்றுவிட்டார். விடாமுயற்சி வணிக ரீதியாக தோல்விப் படமாக மாறினாலும், குட் பேட் அக்லி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாததால் ரசிகர்கள் அஜித்தின் லைன் - அப்கள் குறித்து தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.

33 வருட வாழ்க்கை: இந்நிலையில் அஜித் குமார் அளித்துள்ள பேட்டியில், " நான் எனது எல்லா படங்களையும் எனது முதல் படத்தை எப்படி அணுகுவேனோ, அதேபோலத்தான் அணுகுகிறேன். மிகப்பெரிய வெற்றிப் படங்களாக மாறினாலும், மாறாவிட்டாலும் நான் அப்படித்தான் அணுகுகிறேன். இயக்குநரும் தயாரிப்பாளரும் ஒரு படத்திற்காக 100 நாள் கால்ஷீட் வேண்டும் என்று என்னிடம் கேட்கும் போது அவர்களிடம் சொல்வது ஒன்றுதான், அது நான் உங்களுக்கு கொடுப்பது வெறும் 100 நாட்களோ 120 நாட்களோ அல்ல. நான் உங்களுக்கு கொடுப்பது, எனது 33 ஆண்டு கால சினிமா வாழ்க்கையை கொடுக்கிறேன். என்னை நீங்கள் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூட அவசியமில்லை. ஆனால் என்னை ஒருபோதும் கீழ் நோக்கி நகர்த்தி விடாதீர்கள். அனைவரும் இணைந்து வளர்வோம். இதை நான் எனது அனைத்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இடம் சொல்லுவேன்.

ரேஸிங்கிலும் அதேதான்: நாம் ஒரு மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் இணைந்திருக்கலாம். ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இதை நமது முதல் படம் போல அணுக வேண்டும். இதேபோலத்தான் எனது ரேஸிங்கையும் நான் அணுகுகிறேன். எங்கள் அணி வெற்றிகளை குவித்த பின்னரும், விபத்துகளை எதிர்கொண்ட பின்னரும் நாங்கள் எங்களது அடுத்த ரேஸை எங்களின் முதல் ரேஸாகத்தான் அணுகுகிறோம்" என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











