ரஜினி - கமல் இணையும் படத்தின் இயக்குநர் யார்? நண்பனுக்காக ரஜினி செய்த செயல்.. செய்யாறு பாலு பேட்டி!
சென்னை: ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் இணைந்து பணியாற்ற இருக்கும் படத்தை இயக்கும் பொறுப்பில் இருந்து லோகேஷ் கனகராஜ் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் இயக்குனர் நெல்சன் தேர்வாகி இருப்பதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், சினிமா மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, ரஜினி, கமல் படத்தை இயக்க இருக்கும் இயக்குநர் பற்றி யாருக்கும் தெரியாத தகவலை கூறியுள்ளார்.
அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு படம் வரவுள்ளதாக கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன. சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். இந்த விஷயத்தை கமல்ஹாசன் உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் சைமா விருது விழாவில் பேசிய அவர், எங்கள் காம்போவை ரசிகர்கள் விரும்பினால் நல்லது, அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் எங்களுக்கும் மகிழ்ச்சி. நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க பல ஆண்டுகளாக முயற்சி செய்தோம். ஆனால் அது நடக்கவில்லை. விரைவில் உங்கள் முன் ஒன்றாக வருவோம். அது உங்களை ஆச்சரியப்படுத்தும் என்றார்.

இயக்குநர் யார் தெரியுமா?: இருவரும் இணைந்து நடிக்கும் படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என கூறப்பட்டது. அவர் சொன்ன கதையில் அதிக வன்முறை இருந்தால், ரஜினி அந்த கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம், அடுத்ததாக இயக்குநர் நெல்சன் படத்தின் இயக்குநர் என்று செய்தி வெளியானது. ஆனால், நமக்கு கிடைத்த தகவல்படி இவர்கள் இரண்டு பேருமே இல்லை. இந்த படத்தை இயக்கப்போவது சுந்தர் சி தான். இவரை தேர்வு செய்தது ரஜினிகாந்த் தான். சுந்தர் சி இந்த திரைப்படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ரஜினிகாந்த் விரும்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை கமலஹாசனிடம் ரஜினி கூறியிருக்கிறார். கமலும் அதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ஓகே சொல்லி இருக்கிறார். ஏனென்றால், இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு முக்கிய காரணமே, 'தக் லைஃப்" திரைப்படத்தால் கமல்ஹாசனுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அந்த நஷ்டத்தை ஈடு கட்டுவதற்காக தான் இருவரும் இணைந்து தற்போது படத்தில் நடிக்க உள்ளனர். இதனால் ரஜினியின் தேர்வை கமல் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
நண்பனுக்காக உதவிய ரஜினி: கமலும் ரஜினியும் சுந்தர் சிக்கும் ஓகே சொல்வதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ரஜினிகாந்த் நடித்து, சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அருணாச்சலம் படத்தை இயக்கியவர் சுந்தர் சி தான். அதேபோல, இந்த காலத்து இளசுகள் கொண்டாடும் திரைப்படமாக கமலஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்படம் இருக்கிறது. இந்த திரைப்படத்தை இயக்கியதும் சுந்தர் சி தான். குறுகிய காலத்திலேயே ஒரு கமர்ஷியல் ஹிட் திரைப்படம் கொடுக்க சுந்தர் சியால் முடியும் என்பதால் இருவரும் சேர்ந்து சுந்தர் சியை தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது என செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது சுந்தர் சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











