ஒரு பக்கம் ஊறும் கவிதை..மறுபக்கம் மீறும் கவலை.. இயக்குனர் சீனு ராமசாமியின் லாக்டவுன் குறிப்பு!
சென்னை: ஒரு பக்கம் கவிதை ஊறினாலும் மற்றும் சினிமா பற்றிய கவலை அதிகரிக்கிறது என்று இயக்குனர் சீனு ராமசாமி சொன்னார்.
விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த தென்மேற்கு பருவக்காற்று, விஷ்ணு நடித்த நீர்பறவை, விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை, உதயநிதி, தமன்னா நடித்த கண்ணே கலைமானே படங்களை இயக்கியர் சீனு ராமசாமி.
இப்போது விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கி இருக்கிறார். லாக்டவுன் முடிந்ததும் அடுத்த படத்தை தொடங்க இருக்கிறார்.

உயிர்க்கொள்ளி வைரஸ்
கொரோனா, உலகம் முழுவதும் ஒன்றரை லட்சம் பேரை பலி வாங்கி இருக்கிறது. இந்த உயிர்க்கொள்ளி வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

லாக்டவுன் நேரம்
இதுவரை மொத்தம் 507 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் இதன் பாதிப்பு அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சினிமா ஷூட்டிங் இல்லாததால், நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் வீடுகளுக்குள் முடங்கி இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த லாக்டவுன் நேரத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று இயக்குனர் சீனு ராமசாமியிடம் கேட்டோம்.

ஒவ்வொரு நாளும்
'யாரும் இப்படியொருச் சூழலை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். சென்னை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமையை, வழக்கமாகக் கொண்டாடுவார்கள். அன்றைய நாளை, அவர்கள் நாளாகவே பார்ப்பார்கள். தினமும் வேலை பார்க்கும் அவர்களுக்கு அந்த ஒரு நாள் முக்கியம். அதனால் வீட்டை விட்டு வரமாட்டார்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் ஞாயிற்றுக்கிழமைதான் என்கிற நிலையை கொண்டு வந்து தந்திருக்கிறது, கொரோனா வைரஸ்.

அமைதி, படிப்பு
நான், இந்த லாக்டவுன் நேரத்தில் தினமும் சினிமா பார்க்கிறேன். மாலை 7 மணி ஆகிவிட்டால் படம் பார்க்கவேண்டும். இல்லை என்றால் தலை வெடித்துவிடும் என்கிற நிலைக்கு வந்துவிட்டேன். அதை தவிர, இதுவரை படிக்காமல் விட்ட புத்தகங்களை தேடிப் படிக்கிறேன். அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்டை செதுக்கி வருகிறேன். சில நேரங்களில் அமைதியாகவே இருந்துவிடுகிறேன்.

வேடிக்கை பார்க்கிறேன்
இதற்கிடையில் கொரோனாவுக்காக, பாடல் ஒன்றை வெளியிட்டேன். சில கவிதைகளை எழுதி வருகிறேன். ஒரு பக்கம் கவிதை ஊறினால் மறுபக்கம் சினிமா பற்றிய கவலையும் சேர்ந்துகொள்கிறது. இந்த லாக்டவுன் முடிந்து சினிமா, உடனடியாக தனது இயக்கத்தைத் தொடங்குமா, இல்லை அதற்கு நேரமாகுமா என்ற கவலையும் இருக்கிறது.

காலம் மட்டுமே
அடுத்து நடக்கப் போவதை அனைவரையும் போல நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதுவும் கடந்துபோகும் என்ற நிலைதான் எனக்கும். ஏனென்றால் காலம் மட்டுமே எல்லாவற்றுக்கும் மருந்தாக இருக்கிறது. அது பலவற்றை குணமாக்கி இருக்கிறது. பல விஷயங்களை வளமாக்கி இருக்கிறது. நான் அதில் வேடிக்கை பார்ப்பவனாக இருக்கிறேன்' என்கிறார் சீனு ராமசாமி.


Click it and Unblock the Notifications











