பன்றி கறியை சாப்பிடுங்கள்,இல்லையென்றால் கிளம்புங்கள்...சேத்துமான் படப்பிடிப்பில் இயக்குநர் தமிழ்
சென்னை: என்னை பொறுத்தவரை படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நான் உருவாக்கிய சிற்பங்கள். சிற்பங்களில் பிடித்தது என்று தனியாக கூற என்னால் முடியாது என்று சேத்துமான் திரைப்பட இயக்குநர் "தமிழ்" கூறியுள்ளார்.
Recommended Video
சேத்துமான் திரைப்படம் சமீபத்தில் வந்த படங்களில் மிக வித்யாசமான முயற்சி என்று பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகி சோனி லைவ் ஒடிடி தளத்தில் சேத்துமான் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு பார்க்கலாம்.

மக்கள் அனைவரிடமும் சென்ற படம்
கேள்வி: சேத்துமான் திரைப்படத்தின் வரவேற்பு எப்படி இருக்கிறது?
பதில்: சேத்துமான் திரைப்படம் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தியேட்டரில் ரிலீசாகியிருந்தால் கூட இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகி உலக மக்கள் அனைவரிடமும் சென்றடைந்துள்ளது என்பதில் இயக்குநராக நான் பெருமை கொள்கிறேன் என்றார்.

ஜாதி மோதல்கள்
கேள்வி: சேத்துமான் என்று படத்திற்கு தலைப்பு வைக்க என்ன காரணம்?
பதில்: மான் கறியை போன்று சுவையுள்ளது பன்றிக்கறி. நான் சாப்பிட்டிருக்கிறேன். சேத்திலிருந்து கிடைக்கக்கூடிய மான் என்பதே பொருள். இதை மையப்படுத்தியும், அந்த கறியினால் ஏற்படக்கூடிய ஜாதி மோதல்களையும் மக்களுக்கு காட்டியுள்ளேன் என்றார்.

என்னை கவர்ந்த நாவல்
கேள்வி: சேத்துமான் திரைப்படத்திற்கு வசனம் எழுதியது யார்?
பதில்: இந்த படத்தின் கதையை பெருமாள் முருகன் எழுதிய 'வருகறி' எனும் சிறுகதை தொகுப்பிலிருந்து எடுத்தேன். அந்த சிறுகதை என்னை மிகவும் பாதித்தது. எனவே அவற்றை திரைப்படமாக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன்பின்பு 'வருகறி' யை தழுவி, நான் திரைக்கதையை எழுதினேன். அதை பெருமாள் முருகன் அவர்களிடம் கொடுத்து, இந்த திரைக்கதையை வட்டார வழக்குகளில் வேண்டும் என்றும், நான் வசனம் போன்றவற்றை எழுதினால் சிறப்பாக இருக்காது. எனவே நீங்கள் மாற்றி கொடுங்கள் என்று கூறினேன். அவரும் எனக்கு ஒரு டிராப்ட் எழுதி கொடுத்தார். படத்தில் வரும் வசனங்கள் பெரும்பாலும் அவருடையது. சினிமாவிற்கு தேவையானவற்றை மட்டும் அங்கங்கே நான் மாற்றியுள்ளேன் என்றார்.

நான் உருவாக்கிய சிற்பங்கள்
கேள்வி:உங்களுக்கு படத்தில் பிடித்த கதாபாத்திரம் யார்?
பதில்: என்னை பொறுத்தவரை படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் நான் உருவாக்கிய சிற்பங்கள். சிற்பங்களில் பிடித்தது என்று தனியாக கூற முடியாது. கதாபாத்திரத்தை அமைத்தது என்பது மிகப்பெரிய சவாலாகவே எனக்கு இருந்தது. கதாபாத்திரங்களை தேடி நான் நாய் மாதிரி அலைந்தேன் என்றார்.
சிறுவன் கதாபாத்திரத்தை அமைப்பது தான் கஷ்டமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அந்த கதாபாத்திரம் எனக்கு சீக்கிரமாகவே அமைந்து விட்டது. இன்னும் சொல்லப்போனால் சிறுவன் அஸ்வின் ஒரே டேக்கில் நடித்து கொடுத்தது எனக்கு எளிமையாக இருந்தது.

ஐந்தாவது கேமராமேன்
கேள்வி: படப்பிடிப்பின்போது உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் என்ன?
பதில்: படத்தில் பன்றிக்கறி சமைப்பது போன்ற ஒரு காட்சி இடம்பெறும். அந்த காட்சியை படமாக்குவதற்கு நாங்கள் சிரமப்பட்டோம். ஏனென்றால் அந்த காட்சி படமாக்கும்பொழுது மழை வந்து விட்டது. உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஏனென்றால் எதார்த்தமாக அமைய வேண்டும் என்பதற்காக தான். அதன்படி மறுநாள் சென்று படப்பிடிப்பு நடக்கும் இடத்தை தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாத்தோம். மேலும் படம் முழுவதையும் ஹேண்ட் ஹெல்டு கேமரா முறையையே கேமராமேன் அதிகம் படமாக்கினார். இதனால் படங்களில் ஷேக்கிங் இருக்கும். இவற்றை தவிர்ப்பதற்கு நாங்கள் முயற்சித்தோம். ஆனால் தவிர்க்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் 4 கேமராமேன் மாறி, ஐந்தாவதாக வந்த கேமராமேன் ப்ரித்வி கலைராஜ். அவரது பணியை சிறப்பாக எங்களுக்கு செய்து கொடுத்தார் என்றார். மேலும் அவர் கூறுகையில், படத்திற்கு சென்சார் போர்டில் 4 வாய்ஸ் கட் கொடுத்தார்கள். அதாவது படத்தில் ஒரு இஸ்லாமியர் ஒருவரின் பெயர் வரும் இடத்திலும் மற்றும் கண்ணகி தொடர்பான இடத்தில் வாய்ஸ் கட் அளிக்கப்பட்டது என்றார்.

நான் விவாதிப்பதில்லை
கேள்வி:படத்தின் திரைக்கதையை எத்தனை தடவை மாற்றியமைத்தீர்கள்?
பதில்: படத்தின் திரைக்கதை குறித்து நான் யாரிடமும் எப்போதும் விவாதிப்பதில்லை. நான் என்ன நினைக்கிறேனோ அதை செய்வேன். அதற்காக நான் பிடிவாதக்காரன் என்ற அர்த்தமில்லை. திரைக்கதையை எழுதி விட்டு, எனது இணை இயக்குநர் சதீஷ் சௌந்தரிடம் மட்டுமே கொடுப்பேன். அவர் ஏதாவது கரெக்ஷன் செய்தால், அது குறித்து விவாதித்து விட்டு எனக்கு சரி என்று தோன்றினால் மட்டுமே மாற்றுவேன். திரைக்கதையை முழுவதுமாக எழுதிவிட்டு, தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய பா.ரஞ்சித்திடம் கொடுத்தேன். அவருக்கும் கதை பிடித்து விட்டது. நமது கம்பெனி மூலமாக படத்தை தயாரிப்போம் என்றார்.

தாழ்ந்தவர்கள் யார்?
கேள்வி: பன்றிக்கறியை படக்குழுவினர் சாப்பிட்டீர்களா?
பதில்:எனது நோக்கமே பன்றிக்கறியை அனைவரும் சிக்கன், மட்டன், மீன் போன்று சாப்பிட வேண்டும். பன்றிக்கறி சாப்பிடுபவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதக்கூடாது என்பதே. படப்பிடிப்பின்போது பன்றி கறியை சாப்பிடுங்கள். இல்லையென்றால் கிளம்புங்கள் என்று உறுதியாக கூறினேன் என்றார். மேலும் மாட்டுக்கறியை வைத்து இங்கு அரசியல் செய்கிறார்கள். சமீபத்தில் கூட கறிக்காக ஆம்பூர் பக்கம் பல சம்பவங்களும் நடந்தேறியது. இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்றார்.
நல்ல திரைப்படம்
கேள்வி:ரசிகர்களிடம் நீங்கள் கூற விரும்புவது?
பதில்: ஒரு சிலர் நல்ல திரைப்படங்கள் வருவதில்லை. அதனால் நாங்கள் திரைப்படம் பார்க்க விரும்புவதில்லை என்கின்றனர். என்னை பொறுத்தவரை சேத்துமான் திரைப்படத்தில் நல்லதொரு கருத்தை கூறியுள்ளோம். எல்லோரும் சமம் என்பதை மக்கள் புரிந்து, அவற்றை நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.
இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/mPkQsBKv89Y இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், சேத்துமான் திரைப்பட இயக்குநர் தமிழ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்..


Click it and Unblock the Notifications











