'இட்லி கடை' படத்தில் நான் ஹீரோன்னு தனுஷ் சொன்னார்! - நடிகர் இளவரசு மனம் திறந்தார்
சென்னை: "இட்லி கடை படத்துல நான் ஹீரோன்னு தனுஷ் சொன்னாரு!" நடிகர் இளவரசு அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவுகூர்ந்து சிரித்தார். தனுஷ் எப்படி தனக்கு இட்லி கடை படத்தில் ஒரு முக்கியமான ரோல் கொடுத்தார் என்பதை பற்றி பகிர்ந்துகொண்டார்.
ஒளிப்பதிவாளராக தனது திரை பயணத்தை தொடங்கிய இளவரசு, பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து அசத்தியுள்ளார். இப்போது 'இட்லி கடை’ படத்தில் நடித்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தனுஷுடனான தனது நட்பு மற்றும் சினிமா அனுபவங்களை பற்றி பேசினார்.

இளவரசு தனது பால்ய கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். "எங்க ஊர்ல கடையே கிடையாது. ஒரு அப்பத்தா காலையில இட்லி சுட்டு பக்கத்து ஊர்ல விப்பாங்க. அதுதான் நான் சாப்பிட்ட முதல் இட்லி" என்று அந்த நாள்களை நினைவு கூர்ந்தார். அந்த இட்லியின் ருசியை இப்பவும் மறக்க முடியாது என்றார்.
தனுஷுடன் ஏற்கனவே திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் இளவரசு நடித்திருக்கிறார். சமீபத்தில் ராயன் படத்தில் ஒரு சிறிய வேடம் கொடுத்தார். "என்ன சார் வாக்கியா வரப்பு தகராறு மாதிரி கூப்பிடவே இல்லன்னு கேட்டேன்" என்று தனுஷிடம் உரிமையோடு பேசியதை இளவரசு குறிப்பிட்டார்.
இட்லி கடை படத்தில் தனக்கு ஹீரோ வேடம் என்று தனுஷ் சொன்னதும் இளவரசு ஆச்சரியப்பட்டாராம். "நீங்கதான் ஹீரோ, நான் டைரக்டர் தான்" என்று தனுஷ் கூறியதை கேட்டு வாயடைத்து போனதாக கூறினார். அந்த படத்தின் ஷூட்டிங்கில் தனுஷின் அர்ப்பணிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக இளவரசு தெரிவித்தார்.
தனுஷ் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், ஒரு நல்ல மனிதராகவும் இருக்கிறார் என்று இளவரசு புகழ்ந்து பேசினார். "வீட்டுக்குள்ள வீட்டு மனுஷனாவே இருக்காப்பல. அந்த பக்குவம் எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு" என்று தனுஷின் எளிமையான குணத்தை இளவரசு பாராட்டினார்.
இட்லி கடை படத்தில் அப்பாவுக்கும் மகனுக்குமான உறவை சொல்லும் ஒரு முக்கியமான காட்சி இருக்கிறது. "அப்பன் இல்லாத அப்பன் கற்பனையில வந்து ஒரு மகனுக்கு வந்து சொல்றான் அப்படிங்கறது நீங்க எந்த விஞ்ஞானியா இருந்தாலும் இந்த இடம் வந்து உங்கள கொஞ்சம் உருக்கும்" என்று அந்த காட்சியின் ஆழத்தை இளவரசு விவரித்தார்.
சினிமாவில் எத்தனையோ மாற்றங்கள் வந்தாலும் மண்வாசனை மாறவில்லை என்று இளவரசு கூறினார். "இழந்த ஒரு உறவு நமக்கு கடவுளா இருக்காங்கறது எவ்வளவு பெரிய தன்னம்பிக்கை கொடுக்கும்" என்று இளவரசு அந்த படத்தின் கருவை பற்றி பேசினார்.
இட்லி கடை படத்தில் பார்த்திபனின் காட்சிகளை தொடர்ந்து இளவரசு தன் வீட்டுக்கு தனது குடும்பத்துக்கே தெரியாமல் செல்லும் போது நடைபெறும் காட்சி பலரையும் கவர்ந்துள்ளது. ராமதாஸ் எனும் கதாபாத்திரத்தில் இளவரசு அசத்தியுள்ளார். அதிலும், ஷாலினி பாண்டேவை ஹவுஸ் அரெஸ்ட் செய்து வைக்கும் இடமெல்லாம் வேறலெவல்.


Click it and Unblock the Notifications











