எதிர்க்கட்சி செய்யும் தவறு.. ரஜினியின் அரசியல் வருகை.. மக்கள் நீதி மய்யம் சினேகனின் சிறப்பு பார்வை!
சென்னை: ரஜினிகாந்தின் அரசியல் வருகையை மக்கள் நீதி மய்யம் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறது என பாடலாசிரியரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகன் அளித்துள்ள பேட்டி ஒன் இந்தியா தமிழ் யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.
கவிஞராக ஏகப்பட்ட பாடல்களை எழுதி பிரபலமான சினேகன், நடிகர் அவதாரம் எடுத்தார். அதன் தொடர்ச்சியாக, பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியிலே கமல் கட்சியில் இணைந்து விட்டேன் என்ற சினேகன், ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இளைஞரணி செயலாளர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த சினேகன், நடிகர் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அந்த கட்சியில் அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மநீம சார்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார்.

எதிர்க்கட்சி செய்யும் தவறு
எதிர்க்கட்சி செய்யும் தவறுகள் குறித்தும், வாரிசு அரசியலை தமிழக இளைஞர்கள் விரும்பவில்லை என்றும், 40 ஆண்டு காலமாக நலத்திட்ட பணிகளை ரசிகர்கள் மன்றங்கள் செய்து வந்த நிலையில், உலகநாயகன் தலைமையில் மக்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பு தாருங்கள் என்று தான் கேட்கிறோம் என்று பேசினார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு
மேலும், அரசியலுக்கு ரஜினிகாந்த் வருவதை மக்கள் நீதி மய்யம் எப்படி பார்க்கிறது என்ற கேள்விக்கு, கொஞ்சமும் தயக்கம் காட்டாமல், ரஜினியின் அரசியல் வருகையை மக்கள் நீதி மய்யம் எப்போதுமே வரவேற்கிறது என்றார். ரஜினிகாந்த் மக்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறதும் நல்ல விஷயம் தானே என்றார்.

50 ஆண்டுகால நட்பு
ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரே குடும்பமாகவும், நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர். வாரத்தில் 3 நாட்களாவது இருவரும் சந்தித்துக் கொள்வதையும் பேசிக் கொள்வதையும் வழக்கமாக்கிக் கொண்டு நட்பு பாராட்டி வருவதை எல்லாம் இந்த அரசியல் விளையாட்டுக்கள் ஒன்றும் செய்யாது என்றும் கூறினார்.

எப்படி சொன்னாலும் குத்தம்
உடல்நிலை காரணமாக ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்று நாங்கள் சொன்னால், உடனே அவரை பார்த்து பயம் என்று சொல்லி விடுவார்கள். இல்லை வரட்டும் என்று சொன்னாலும், நட்பு பாராட்டாமல், ரஜினியின் உடல்நிலை என்ன ஆனாலும் பரவாயில்லையா என்றும் பேசுவார்கள் என சிரித்துக் கொண்டே சினேகன் ஒரு போடு போட்டார்.

கைகோர்த்து களமாடுவோம்
அதிமுக, திமுக என்கிற இரண்டு பெரிய கட்சிகளின் ஆட்சிகளையும் மக்கள் ரொம்பவே பார்த்து நொந்துப் போய்விட்டனர். மாற்று அரசியலை காணும் நேரம் வந்து விட்டது. இளைஞர்கள் தயாராக இருக்கின்றனர் ஒரு மாற்றத்தை நிகழ்த்த, ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், வாருங்கள் கைகோர்த்து களமாடுவோம் என நம்மவர் சொல்வதற்கு முன்னாடியே நானே சொல்லி விடுவேன் என்று தனது கருத்தையும் சினேகன் பதிவிட்டுள்ள பேட்டியை காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











