ஹக்கிங்,கிஸ்ஸிங் எல்லாமே இருக்கு.. சினேகா நடிக்க மாட்டேன்னு சொல்லுவாங்க..பிரசன்னா சொன்ன சுவாரஸ்யம்!
சென்னை: பாலாஜி மோகன் தயாரிப்பில் விக்னேஷ் விஜயகுமார் இயக்கத்தில் பிரசன்னா, கனிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது Mad Company வெப்சீரிஸ்.
இந்த வெப்சீரிஸ் ஆஹா ஒடிடி தளத்தில் ஒளிபரப்பாகியுள்ளது. நீண்ட கால இடைவெளிக்குப்பின் கனிகா இந்த சீரிஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வெப் தொடரின் இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் சர்வா ஆகியோர் நமது பிலிம் ஃபீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

நேரில் பார்த்தது இல்லை
கேள்வி: இயக்குநர் விக்னேஷ் விஜயகுமார், Mad Company வெப்சீரிஸ் எது தொடர்பான கதை?
பதில்: வெளிநாடுகளில் பொழுதுபோக்குவதற்கு, கட்டிப் பிடிப்பதற்கு, ஆறுதல் கூறுவதற்கென வாடகைக்கு ஆட்கள் கிடைப்பார்கள் என என் நண்பன் ஒரு முறை கூறியிருந்தார். இந்தியாவில் இதுபோன்று நடப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அப்படி ஒரு கம்பெனி இப்பொழுது இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை தான் இப்படத்தின் கரு. இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். நடிகை கனிகாவை இதற்கு முன் நான் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் அவர்களுடன் பணிபுரியும் பொழுது நிறைய பாசிட்டிவ் வைப்ஸ் இருந்தது. சுரேஷ் சக்ரவர்த்தியும் ஒரே டேக்கில் அவர் நடிக்கும் காட்சிகளையும் நடித்து விடுவார் என்றார்.

எதார்த்தமான நடிப்பு
கேள்வி: பிரசன்னா, நீண்ட இடைவெளிக்கு பின் நடிகை கனிகாவுடன் நடிப்பது குறித்து...
பதில்: 19 வருடங்களுக்குப் பிறகு நானும் கனிகாவும் இணைந்து நடிக்கிறோம். ஃபைவ் ஸ்டார் படத்தில்
நடித்த 5 பேரில் ஒருத்தரை தவிர, மற்ற நான்கு பேரும் இன்னும் நண்பர்களாக இருக்கிறோம். நிஜ வாழ்க்கையில் உள்ள நட்பு போலத் தான் இப்படத்திலும் வருகின்ற கதாபாத்திரங்களும். எனவே நடிப்பு எதார்த்தமாக வந்துள்ளது.

கல்லுக்குள் ஈரம்
கேள்வி: பிரசன்னா, மாட் கம்பெனி படத்தின் மையக்கருத்து என்ன?
பதில்: ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு மென்மையான குணம் உண்டு. கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் எவ்வளவு கடினமான மனிதருக்கும், வேறொரு குணம் இருக்கும். இந்தப் படத்தின் ஏ.கே. கேரக்டரும் அப்படித் தான். ஒரு சில சமயம் கோபமான மனநிலையில் இருக்கும் ஏ.கே, சில நிமிடங்களில் ஒரு குழந்தையுடன் விளையாடும் மனநிலைக்கு மாறிவிடுவான். இந்த நிலைக்கு காரணம் அவனுக்கு நடந்த சில சம்பவங்கள் தான், அது கடைசி எபிசோடில் தான் தெரியும் என்றார். மேலும் அவர் கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு காதல், காமெடி கலந்த படம் பண்ணுவதற்கான வாய்ப்பை இயக்குநர் விக்னேஷ் எனக்கு கொடுத்துள்ளார். தொடர்ந்து வில்லனாகவும், கெட்டவனாகவும், ரொம்ப கெட்டவனாக போன்ற கதாபாத்திரங்களை செய்து போர் அடித்து விட்டது. இந்தப் படத்தில் பொம்மிக்கும், எனக்கும் லவ், ரொமான்ஸ் உள்ள ஒரு பாடல் இருக்கிறது. முதல் 5 எபிசோடுகள் வரைக்கும் ரொம்ப காமெடியாக போகும். அதற்கடுத்து வருகின்ற எபிசோடுகள் எல்லாம் நிறைய எமோஷனலுடன் இருக்கும் என்றார்.

தாத்தா உறவு வேணும்
கேள்வி: பிரசன்னா, புன்னகை அரசி சினேகா சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பது குறைந்து வருவது குறித்து...
பதில்: என் மனைவி படத்தில் நடிக்காததற்கு காரணம் எங்கள் குழந்தைகள் தான். எங்கள் இரண்டு பேரில் யாருக்கு படப்பிடிப்பு இல்லையோ, அவர்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்கிறோம். சினிமாவில் சில நேரங்களில், தொடர்ந்து 30 நாட்களுக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவ்வாறு சூழ்நிலை ஏற்படும்பொழுது, சினேகாவே வேண்டாம் என்று கூறி விடுவார். Mad Company படத்தில் வருகின்ற மாதிரி எனக்கு எந்த பேயும் தேவையில்லை. கடவுள் அருளால் எனக்கு எல்லா உறவும் சரியாக அமைந்திருக்கிறது. ஆனால் எனக்கு சின்ன வயதிலிருந்து தாத்தாக்கூடவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். அது மாதிரி தாத்தா ஒரு உறவா அமைந்தால் நன்றாக இருக்கும் என்றார்.

கிளைமாக்ஸ் காட்சி
கேள்வி: பிரசன்னா நீங்கள், இயக்குநர் வெங்கட்பிரபுவுடன் இணைந்து பணியாற்றியது குறித்து...
பதில்: இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் உங்களுடன் இணைந்து ஒரு படம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தேன். கோவிட் லாக்டவுன் காலக்கட்டத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, எனக்கு போன் செய்து ஷார்ட் பிலிம் செய்யலாமா? என்று கேட்டார். அவ்வாறு அமைந்தது தான் விக்டிம். அதில் கிளைமாக்ஸ் காட்சியின்போது வருகின்ற வசனம் ரொம்ப அருமையாக இருக்கும்.
என்னுடைய பாஸ்
கேள்வி: நடிகர் சர்வா, இந்த வெப்சீரியஸில் நடித்தது குறித்து...
பதில்: நடிகை அமலாபாலுடன் இணைந்து விக்டிம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தேன். இந்த படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ரொமான்ஸ், காமெடி, சென்டிமெண்ட் கலந்த நல்ல சப்ஜெக்ட் Mad Company. இதில் நடிகர் பிரசன்னா என்னுடைய பாஸ். நிஜவாழ்க்கையிலும் அவர் அப்படித்தான். படப்பிடிப்பின்போது அவரிடமிருந்து நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். இயக்குநர் விக்னேஷ் விஜயகுமாருடன் இணைந்து பணியாற்றும்பொழுது, நல்ல புரிதல் உருவானது. ஸ்கிரிப்ட் படித்து விட்டு, நான் சொல்கின்ற மாற்றங்களை அவர் ஏற்றுக் கொள்வார் என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்டியூப் சேனலிலும் https://www.youtube.com/watch?v=tAHp3nXTF7Q இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications











