அந்த சீனில் உண்மையில் நான் அழுது விட்டேன்...எஸ்.எம்.மாணிக்கம் சேத்துமான் படம் குறித்து பேட்டி
சென்னை: என் மகனும் இயக்குநர் தான் என்று சேத்துமான் திரைப்படத்தில் பூச்சியப்பா என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.எம்.மாணிக்கம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு பேரனாக நடித்த அஸ்வின் இயக்குநர் சொன்ன மாதிரியே நடிக்கும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என்று அவருக்கு புகழாரம் சூட்டினார்.
இப்படத்தில் நடித்த குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் அஸ்வின் கூறுகையில் , பூச்சியப்பா தாத்தாவுடன் நடிக்கும்போது, எனது சொந்த தாத்தாவுடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
பா.ரஞ்சித் தயாரிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகி, தற்போது சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ள சேத்துமான் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் எஸ்.எம்.மாணிக்கம், சிறுவன் அஸ்வின் ஆகியோர் நமது பிலிம்பீட் வினோத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்.

10 நாட்கள் டெஸ்ட்
கேள்வி: பூச்சியப்பா (எஸ்.எம்.மாணிக்கம்) என்ற அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ள உங்களுக்கு சேத்துமான் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எப்படி கிடைத்தது?
பதில்: இப்படத்தின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக சென்னையில் 10 நாட்கள் டெஸ்ட் வைத்தார்கள். அந்த டெஸ்ட்டில் நான் கலந்து கொண்டேன். எல்லோருக்கும் என்னை பிடித்து விட்டது. அது மட்டுமின்றி இப்படத்தின் கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த மாதிரியான கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. நான் நடித்த வெங்காயம் படத்திற்கு பிறகு சிறிய, சிறிய கதாபாத்திரங்கள் வந்தது. நான் நடிக்கவில்லை. நல்ல கதைக்காக காத்திருந்தேன். நான் எதிர்பார்த்த கதை இருந்ததால், ஆர்வமாக நடித்தேன் என்றார்.

மனதார பாராட்டுகிறேன்
கேள்வி: சேத்துமான் படத்தில் நடிக்கும்போது, நீங்கள் ஏதாவது காட்சியில் அருவருப்பு அடைந்தீர்களா?
பதில்: இல்லை. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு நான் பயிற்சி எடுத்துக் கொண்டு நடித்தேன். இப்படத்தில் பன்றியின் தோல் உரிக்கும்போது, நான் எந்தவித அருவருப்பும் அடையவில்லை. ஏனென்றால் இயக்குநர் தமிழின் ஆசை என்னவென்றால், படம் எதார்த்தமாக வர வேண்டும் என்பது தான். நானும் அவ்வாறு நடித்தேன். எனக்கு பேரனாக நடித்த சிறுவன் அஸ்வினும், சொன்ன மாதிரி நடித்து கொடுத்தார் . உண்மையில் அவரை நான் மனதார பாராட்டுகிறேன் என்றார்.

பயம் கலந்த உணர்வு
கேள்வி: அஸ்வின், இந்த படத்தில் நடித்தது எப்படியிருந்தது?
அஸ்வின் பதில்: பூச்சியப்பா என்ற இந்த தாத்தாவுடன் நான் இருக்கும் தருணங்கள், எப்படி ஒரிஜினல் தாத்தா கூட இருப்பது போன்ற ஒரு உணர்வு ஏற்படுமோ அது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. நான் ஒரு ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு, பூச்சியப்பா தாத்தா தோள் மீது உட்கார்ந்து செல்வேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மேலும் படத்தில் பன்றியை வெட்டும்போது, மரத்துக்கு பின்னால் இருந்து அந்த காட்சியை பார்க்கும்பொழுது, பயம் கலந்த உணர்வு தனக்கு ஏற்பட்டதாகவும் கூறினார் அஸ்வின் . மேலும் திரைப்படத்தில் பள்ளிக்கூடத்தில் நான் டான்ஸ் ஆடும் காட்சி ரொம்ப பிடித்ததாகவும், தான் எப்போதும் பள்ளியில் முதல் ரேங்க் எடுக்கும் மாணவன் என்றும் தெரிவித்தார். இந்த படத்தில் தனது அப்பாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், அம்மா படம் பார்த்து பாராட்டியதாகவும் தெரிவித்தார்.

முற்போக்கு சிந்தனையுள்ள கதை
கேள்வி: சேத்துமான் படத்தின் மையக்கருத்து என்று நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில் : இப்படத்தின் கதை முற்போக்கு சிந்தனையுள்ள கதை. கறி சாப்பிடுவதை வைத்து மனிதர்களை பிரிக்கிறார்கள். இந்த கறியை சாப்பிடுபவர்கள் இவர்கள் என்று தரம் பிரிக்கின்றனர். அப்படி இல்லாமல் எல்லோரும் எல்லா கறியையும் சாப்பிடலாம். உண்மையில் இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் பன்றிக்கறியை சாப்பிட்டு இருக்கிறார்கள் . இந்த திரைப்படத்தில் கறியினால் ஏற்படுகின்ற ஜாதி சண்டை ரொம்ப எதார்த்தமாக இருக்கும். ஒரே டேக்கில் ஒரு சண்டைக்காட்சியை படமாக்கினர் இயக்குநர் . கேமராமேன் 25 கிலோ வெயிட்டை தோளில் வைத்து கொண்டு படம்பிடித்தார். உண்மையில் அவரை பாராட்ட வேண்டும்.

தொடர்ந்து நடிப்பேன்
கேள்வி: இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நீங்கள் நடித்தது குறித்து?
பதில்: எனது மகனும் ஒரு இயக்குநர் தான். அவர் இயக்கிய வெங்காயம் படத்தில் நான் நடித்திருந்தேன். இந்த சேத்துமான் கதை குறித்து எனது மகனிடம் நான் கூறுகையில், கதை அவருக்கு பிடித்திருந்தது. நீங்கள் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று கூறினார் . மேலும் இயக்குநர் பா.ரஞ்சித் என்னுடைய மரியாதைக்குரியவர். அவருடைய கற்பனை, சிந்தனைகள் அனைத்தும் மக்களுக்கு பயன்படுகின்றன. இப்படம் கமர்ஷியல் படமாக இல்லாமல், மக்களுக்கு ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணத்தில் படத்தை தயாரித்ததற்காக நான் அவரை பாராட்டுகின்றேன். இதுபோன்ற படங்களை அவர் தயாரிக்கும்பொழுது, அவரது படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.
எல்லோரும் சரிசமம்
கேள்வி: உங்களுக்கு பிடித்த வசனம் எது?
பதில்: நான் செல்லம்மா வீட்டில் உட்கார்ந்து பேசும்போது, இது சாதாரண கல்லா? நெஞ்சில் விழுந்து பாராங்கல் என்று சொல்லும் வசனம் எனக்கு ரொம்ப பிடித்தது. அந்த சீனில் உண்மையில் நான் அழுது விட்டேன் என்றார். மேலும் மக்களிடம் ஜாதி, மத ஏற்றத்தாழ்வு, கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். எல்லோரும் சரிசமம் என்கின்ற உணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/XAHlXVinZFc இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். பில்மிபீட் ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் வினோத், நடிகர் எஸ்.எம்.மாணிக்கம், சிறுவன் அஸ்வின் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளனர். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.


Click it and Unblock the Notifications











