அஜீத் படம் கிடைச்சா சந்தோஷப்படுவேன் - ஜெயம் ராஜா

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தை இயக்கியுள்ளார் ராஜா. தமிழில் முதல் முறையாக தன் தம்பி ஜெயம் ரவி இல்லாமல் அவர் இயக்கியுள்ள படம் வேலாயுதம்.
இந்தப் படத்துக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது ரசிகர்கள் மத்தியில். விநியோகஸ்தர்கள் மத்தியிலும் நல்ல பேச்சு நிலவுவதால் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ராஜா.
வேலாயுதம் பட அனுபவம் குறித்து நேற்று நிருபர்களிடம் ராஜா கூறுகையில், "வேலாயுதம் எனக்கு 7வது படம். ரொம்ப பெரிய பட்ஜெட் படமாக அமைஞ்சிருக்கு. 6 படங்களை ரீமேக் செய்தேன். ஆனால் வேலாயுதம் படத்தை ஆசாத் என்ற படத்தின் மூலக்கதையை வச்சி என் சொந்த திரைக்கதையில் படமாக்கி இருக்கேன்.
என் தம்பி ஜெயம் ரவியை வைத்து மட்டும் 5 படங்களை எடுத்தேன். இப்போது பெரிய ஹீரோவான விஜய்யுடன் சேர்ந்து பண்ணி இருக்கேன். வேலாயுதம் என் திரையுலக வாழ்வில் முக்கிய படமா இருக்கும். இது எனது ஒன்றரை வருட கனவு படம் என்றாலும் மிகையல்ல.
விஜய் என்னை அழைத்து படம் பண்ணலாம் என்றதும் இந்த கதையை உருவாக்கினேன். கமர்சியல் படங்களுக்கான வீரியத்தோடு புது பரிமாணத்தில் இப்படம் இருக்கும்.
இதுவரை நான் எடுத்த படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்து இருக்கின்றன. அதில் எனக்கு சந்தோஷம். எங்க வீட்டு பிள்ளை, பாட்ஷா, அந்நியன் போன்றவை நான் ரசித்த படங்கள். தனித்தனி பார்முலாக்களை அதில் பார்க்கலாம்.
இப்போது வேலாயுதம் படத்தில் வேறொரு பார்முலாவைப் பார்க்கலாம். விஜய் பிரமாதமாக நடித்துள்ளார். டான்ஸ், வசனம் எல்லாவற்றிலும் அசத்தி உள்ளார். நல்ல கதை இருந்தால் படம் வெற்றி பெறும். அந்த கதைக்காகத்தான் மெனக்கெடுகிறேன். வேலாயுதம், நல்ல கதை, அருமையான பொழுதுபோக்கு நிறைந்த படம்.
தேசிய விருது வாங்க வேண்டும் என்பது என் கனவு. அதற்காக இன்னும் உழைப்பேன். விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் மிகச்சிறந்த படமாக வேலாயுதம் இருக்கும். அஜீத்தை வைத்து படம் இயக்க ஆசை. வாய்ப்பு கிடைத்தால் சந்தோஷப்படுவேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











