கமலுக்காக மட்டும்... ஜெயப்ரதா
கமலுக்காக, அவரின் நட்புக்காக மட்டுமே தசாவதாரம் படத்தில் நடித்து வருவதாக கூறும் ஜெயப்ரதரா, தொடர்ந்து தமிழில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார்.
தென்னகத்தின் முன்னாள் கனவுக் கன்னிகளில் முக்கியமானவர் ஜெயப்ரதா. அவருக்கும் ஸ்ரீதேவிக்கும்தான் அந்தக் காலத்தில் போட்டா போட்டியாக இருந்தது.ஸ்ரீதேவியுடன் தெனனிந்திய மொழிகளில் மோதி வந்த ஜெயப்ரதா, அவர் இந்திக்குப் போனபோது இவரும் பின்னாலேயே போய் அங்கும் மோதினார்.
இப்போது முழு நேர அரசியல்வாதியாகி விட்ட ஜெயப்ரதா, சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பியாகவும் உள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்த ஜெயப்ரதா ஒரு நிகழ்ச்சியில் கமல், ரஜினியுடன் இணைந்து கலந்து கொண்டார்.
அந்த நிகழ்ச்சியின்போது நினைத்தாலே இனிக்கும் படத்தில் மூன்று பேரும் சேர்ந்து நடித்த இனிய நாட்களை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டார்களாம். நிகழ்ச்சி முடிந்த போனபோது, தனது தசாவதாரம் படத்தில் ஒரு ரோலில் நடிக்க வேண்டும் என்று ஜெயப்ரதாவிடம் அன்புக் கட்டளை இட்டார் கமல்.
கமல் சொன்னால் தட்ட முடியுமா, உடனே ஓ.கே. சொல்லி விட்டார் ஜெயப்ரதா. இப்போது தசாவதாரம் படத்தில் அவரும் ஒரு அங்கம். ஜெயப்ரதா மீண்டும் நடிக்க வந்த தகவலைக் கேள்விப்பட்ட பல தயாரிப்பாளர்களும் அவரை அணுகி தங்களது படத்திலும் நடிக்க வேண்டும் என்று அணத்த ஆரம்பித்துள்ளனராம்.
ஆனால் ஒரு வாய்ப்பையும் ஏற்கவில்லையாம் ஜெயப்ரதா. கமல் எனது நெருங்கிய நண்பர். அவர் கேட்டதால் நடித்தேன். அவருடன் நடிப்பதில் எனக்குப் பெருமை. மற்றபடி மறுபடியும் தீவிரமாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்கிறார் ஜெயப்ரதா.
நாம, கொடுத்த வச்சது அவ்வளவுதான்!


Click it and Unblock the Notifications











