சந்திப்போமா?
வீரப்பனால் விடுவிக்கப்பட்ட கன்னட நடிகர் ராஜ்குமாரை நடிகர் கமல்ஹாசன் புதன்கிழமை பெங்களூரில் சந்தித்துப்
பேசினார்.மும்பையில் படப்பிடிப்பில் இருந்த கமல்ஹாசன் பெங்களூருக்கு வந்து சென்றார். பின்னர் மும்பை திரும்பிய கமல் கூறுகையில்,
இது ஒரு மறக்க முடியாத சந்திப்பாகிவிட்டது. எனது மகிழ்ச்சி, வெற்றிகளில் ராஜ்குமாருக்கும் பங்குண்டு. நான் முதல்முதலாகபடம் தயாரித்தபோது ராஜ்குமார் என்னுடன் இருந்து என்னை வாழ்த்தினார். எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு சிவாஜிகணேசன் மாதிரி, ராஜ்குமாரும் ஒரு கல்வி மையம் மாதிரி. இவரிடமிருந்து பல விஷயங்களை நான் கற்றுக் கொண்டுள்ளேன்.
அவரை சந்தித்தபோது உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். நான் எப்போதுமே உணர்ச்சிவசப்படாதவன் என்று தான் என்னைப்பற்றிஇது நாள்வரை நினைத்திருந்தன். ஆனால், இம் முறை அது தவறு என்பதை அறிந்து கொண்டேன். என்னைப் பார்த்தவுடன் கட்டிப்பிடித்துக் கொண்டார். நான் அவரைப் பார்த்து சிரிக்க முயன்றேன் முடியவில்லை. அவரது பிடியிலிருந்து விலகிக் கொள்ளவும்முடியவில்லை. அவரிடம் எனக்கு பேசக் கூட வரவில்லை.
கண்ணீருடன் அவர் பேசியது என்னை என்னவோ செய்துவிட்டது. உங்களைப் போன்ற நல்லெண்ணம் கொண்டவர்களை, என்மீது அன்பு கொண்டவர்களை நான் பார்க்க வேண்டும் என்று இருந்திருக்கிறது. அதனால் தான் பத்திரமாகத் திரும்பிவந்திருக்கிறேன்.
நாங்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தவர்களுக்கு நாடகம் போல தெரிந்து இருக்கலாம். சிரிப்புகூட வந்திருக்கலாம். நானும் நடிகன் தானே. கண்ணீர் விடவும் தெரிந்தவன் தானே. ஆனாலும் உண்மையில் அங்கு எனக்குஏற்பட்ட அனுபவம் அலாதியானது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் புரியும்.
தனக்கு வீரப்பனிடம் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி ராஜ்குமார் கூறினார். கடத்தப்பட்டு 2 மாதங்கள் ஆன போது பொறுமைஇழந்துபோன ராஜ்குமார் தன்னைக் கொன்றுவிடும்படி வீரப்பனிடம் கூறியுள்ளார். உடனே வீரப்பன் ராஜ்குமாரை தனியேவிட்டுவிட்டுப் போய்விட்டானாம்.
வீரப்பன் பிரச்சனை என்பது ஒரு நோயின் அறிகுறி தான். அது நோய் அல்ல. வீரப்பனை (பிரச்சனையை) நம்மால் நிறுத்திவிடமுடியும். ஆனால், அவன் தனியானவன் அல்ல. பெரிய கட்டாய் உள்ள பல குச்சிகளில் அவனும் ஒருவன்.
ராம்கோபால் வர்மாவின் ஜங்கிள் படத்தைப் பார்த்துவிட்டுத் தான் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தினான் என்று சொல்வது தவறு.அவன் தமிழ் படங்கள் மட்டும் தான் பார்க்கிறான்.
ராஜ்குமாரிடம் பேசும்போது சொன்னார். வீரப்பனுக்கு என் படங்கள் என்றால் ரொம்பப் பிரியமாம். இதை நான் எங்கு போய்ச்சொல்ல.
இந்த சம்பவத்தை அடுத்து ஒரு விஷயத்தை மட்டும் முடிவு செய்துவிட்டேன். இனி நான் கிரைம் சப்ஜெக்ட் படங்கள் எடுக்கமாட்டேன். இப்போது தமிழ், ஹிந்தியில் எடுக்கப்பட்டு வரும் அபய் படம் கூட சீரியல் கில்லர் தொடர்புடையது தான். ஆனால்,கதையில் சிந்தனைக்கும், கொலைகளுக்கு எதிரான மனிதாபிமானம் தான் உயர்த்திப் பிடிக்கப்பட்டிருக்கிறது என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











