தியேட்டரே கிடைக்காம என் படம் தோத்துடுச்சு.. குமார சம்பவம் இயக்குநர் பாலாஜி வேணுகோபால் வேதனை பேட்டி!
சென்னை: இயக்குநர் பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான குமார சம்பவம் படத்துக்கு சரியான தியேட்டர்கள் மற்றும் ஷோக்கள் கிடைக்காமல் படம் தோல்வியை சந்தித்துள்ளதாக வேதனையுடன் பாலாஜி வேணுகோபால் பேசிய பேட்டி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் ஃபிலிமிபீட்டுக்கு அவர் அளித்த பேட்டியில், "குமார சம்பவம் திரைப்படம் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு சமம்" என்று உருக்கமாகக் கூறினார். ஆனால், சுகப்பிரசவம் ஆகாமல், இன்குபேட்டரில் இருக்கும் குழந்தையைப் போல் இருப்பதாக வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார்.
குமரன் ஏற்கனவே தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இருப்பினும், திரையரங்குகளில் குமரனை ஒரு புதுமுக நடிகராகவே பார்ப்பதாகச் சொல்கிறார்கள். இதன் காரணமாகவே, திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக பாலாஜி வேதனை தெரிவித்தார்.

படத்தின் வெளியீட்டுக்கு முன் பத்திரிகையாளர்கள் பாராட்டியதையும், முதல் நாள் ரசிகர்கள் நல்ல விமர்சனம் தந்தும் தியேட்டர்கள் கிடைக்காதது ஏன் என்ற கேள்வி அவரை வாட்டி வதைக்கிறது. இது தொடர்பாக பல வியாபார காரணங்கள் சொல்லப்பட்டாலும், தனக்கு அதற்கான விடை தெரியவில்லை என்கிறார்.
சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாகட்டும் என்ற எண்ணம் நிலவுவதாகவும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே திரையரங்குகள் என்னும் நிலை உருவாகி வருவதாகவும் பாலாஜி கவலை தெரிவித்தார். நட்சத்திர நடிகர்கள் பலர் இருந்தாலும் கதை இல்லையென்றால் அது திருமண மண்டபம் போலத்தான் இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், மலையாளத் திரைப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ஏன் தமிழ் திரைப்படங்களுக்கு கிடைப்பதில்லை என்ற கேள்வியையும் எழுப்பினார்.தெரிந்த முகங்கள் இருந்தால்தான் தியேட்டருக்கு வருவார்கள் என்ற எண்ணம் மாற வேண்டும் என்றார்.
மேலும், "குமார சம்பவத்திற்கு செய்த விளம்பரங்களை விட அதிகமாக எந்த தயாரிப்பாளரும் செய்திருக்க முடியாது" என்று குறிப்பிட்டார். கைகள் கட்டப்பட்டு ஒரு சண்டையில் எப்படி ஜெயிப்பது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.இருப்பினும், உதவி செய்ய பல பிரபலங்கள் முன்வருவதில்லை என வருத்தத்துடன் கூறினார்.
கடைசியாக, தியேட்டர்களில் காட்சிகள் இல்லாததால், குடும்பத்துடன் படம் பார்க்க ஆசைப்படும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவதாகக் கூறினார். திரையரங்க உரிமையாளர்கள் நல்ல படங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்றும், அப்போதுதான் பல திறமையான படைப்பாளிகள் உருவாக முடியும் என்றும் பாலாஜி வேணுகோபால் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
நண்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த பாலாஜி வேணுகோபால் யோகி பாபுவை வைத்து லக்கிமேன் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். அந்த படத்தில் யோகி பாபு நடித்த நிலையில், தெரிந்த முகம் என்பதால் படம் நல்லாவே ஓடியது என்றார். பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் குமரன் பிரபலமானவராக இருந்த நிலையிலும், புதுமுக ஹீரோ என்கிற நிலையில், எங்கள் படத்துக்கு முக்கியத்துவம் தராமல் முடித்து விட்டார்கள் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











