குஷ்புவின் புது முடிவு
மக்கள் ரசனைக்கேற்ற படங்களைத் தயாரிக்கப் போகிறாராம் குஷ்பு. படிப்படியாக நடிப்பதைக் குறைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.
வருஷம் 16 படத்தில் பார்பி பெண்ணாக அறிமுகமாகி, கோவில் கட்டி வழிபடும் அளவுக்கு கொழுக் மொழுக் என ரசிகர்களைக் கவர்ந்திழுத்து, சூப்பர் ஸ்டார், கலைஞானி, புரட்சிக் கலைஞர், சுப்ரீம் ஸ்டார், நவரச நாயகன், புரட்சித் தமிழன் என அத்தனை முன்ணனி ஸ்டார்களுடனும் பெரிய ரவுண்டு அடித்து ஓய்ந்தவர் குஷ்பு.பழைய தலைமுறையினருடன் மட்டுமல்லாமல், இளைய தலைமுறையினரான விஜய், அருண், சிபி என இக்கால நடிகர்களின் படங்களிலும் தலை காட்டியவர் குஷ்பு.
லேட்டஸ்டாக குஷ்புவின் நடிப்பில் வெளியான படம் பெரியார். மணியம்மை என்கிற அற்புதமான கேரக்டரில் அழகாக நடித்து பலரின் பாராட்டுக்களைப் பெற்ற பெருமிதத்தில் இருக்கிறார் குஷ்பு.
தனது திரையுலக வாழ்க்கையில் பெரும் திருப்தி கொடுத்த கேரக்டர் மணியம்மை கேரக்டர்தான் என்று சந்தோஷமாக கூறும் குஷ்பு, இந்தக் கேரக்டரில் நடித்த பின்னர் சாதாரண கேரக்டர்களில் நடிக்க மனசு வரவில்லை என்றும் கூறுகிறார்.
இதனால் படத் தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போகிறாராம் குஷ்பு. நடிப்பை படிப்படியாக குறைத்துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளாராம்.
அப்படியா என்று குஷ்புவிடம் கேட்டால், மக்கள் ரசனைக்கேற்றபடி நல்ல படங்களைத் தயாரிக்கப் போகிறேன். நடிப்பை விட தயாரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
மணியம்மை கேரக்டரில் நடித்தது மனசுக்கு நிறைவாக உள்ளது. அது ஒரு அற்புதமான வாய்ப்பு. இனிமேல் இதுபோன்ற நிறைவான, நல்ல கேரக்டர்களில் மட்டுமே நடிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
சிறந்த முடிவு, சீரிய முடிவு!


Click it and Unblock the Notifications











