'தப்பு செய்றவங்களுக்கு மீம்ஸ் தான் சரியான சவுக்கடி'... நடிகர் பிரசாந்த் ஓப்பன் டாக்!
மீம்ஸ் கிரியேட்டர்களிடம் உஷாராக இருப்பது அவசியம் என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தவறு செய்பவர்களை தண்டிக்க மீம்ஸ்கள் சரியான சவுக்கடியாக பயன்படுகிறது என நடிகர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் நடித்துள்ள ஜானி படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் அவர் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அடுத்தப்பட வேலைகளை ஆரம்பிப்பதில் தீவிரமாக இருந்தவரை சந்தித்து பேசினேன். அவரிடம் உரையாடியதில் இருந்து,

ஜானிக்கு வரவேற்பு
"ஜானி படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரிலீசான இரண்டு நாட்களில் நிறைய தியேட்டரிகளில் காட்சிகளை அதிகப்படுத்தினர். எனது வழக்கமான படங்களில் இருந்து இந்த படம் வேறுபட்டிருக்கும்.

முழுமையான உழைப்பு
பொதுவாக நான் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கும் போது அதற்கான உழைப்பை முழுமையாக தர வேண்டும் என நினைப்பேன். அதனால் தான் எனது ஒவ்வொரு படத்துக்கும் நிறைய இடைவெளி வருகிறது. சாகசம் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இப்போது ஜானி வந்துள்ளது. ஆனால் அடுத்த ஆண்டு நிச்சயம் ஒரு படம் தர வேண்டும் என நினைக்கிறேன்.

இளம் இயக்குனர்கள்
ஷங்கர், மணிரத்னம், பாலுமகேந்திரா என பெரிய இயக்குனரின் படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். இப்போது வரும் இளம் இயக்குனர்கள் நிறைய ஐடியா வைத்திருக்கிறார்கள். அவர்களது வேலைகளும் வியப்பை தருகின்றன.

ராட்சசனை பிடித்திருக்கிறது
அந்த வகையில் சமீபத்தில் நான் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் ராட்சசன். அதன் மேக்கிங் அருமையாக இருந்தது. மக்களும் அந்த படத்தை ஏற்றுக்கொண்டது மகிழ்ச்சியான விஷயம். இப்போது ரசிகர்களின் சிந்தனை நிறையவே மாறியிருக்கிறது.

விஜய் சேதுபதி பிடிக்கும்
தற்போதை தமிழ் சினிமாவில் என்னை மிகவும் கவர்ந்த நடிகர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பு மிகவும் பாராட்டும் வகையில் இருக்கிறது. அதேபோல் சிம்பு, சிவகார்த்திகேயன் ஆகியோரையும் எனக்கு பிடிக்கும்.

கடிதம் தான் பெஸ்ட்
சமூக வலைதளங்கள் வந்துவிட்டதால் ரசிகர்களிடம் எளிதாக தொடர்ப்பு கொள்ள முடிகிறது. இருந்தாலும் எனக்கு பழைய கடிதப் போக்குவரத்து தான் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் நமக்காக எவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்பதை அந்த கடிதத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு கடிதத்தையும் படித்து பார்த்து பதில் அனுப்புவதில் ஒரு தனி சுகம் இருக்கும். அது இப்போது கிடைப்பதில்லை.

மீம்ஸ் தண்டனை
தற்போது மீம்ஸ் கிரியேட்டர்களிடம் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். நாம் ஏதாவது செய்துவிட்டால் உடனடியாக மீம்ஸ் போட்டே காலி செய்துவிடுவார்கள். சில சமயம் ரசிக்கும்படியாக இருக்கும். ஆனால் பல நேரங்களில் வலியை ஏற்படுத்தும். ஆனால் என்னை பொறுத்தவரை தவறு செய்பவர்களுக்கு சரியான சவுக்கடியாக மீம்ஸ்கள் பயன்படுகின்றன".
இவ்வாறு நடிகர் பிரசாந்த் கூறினார்.


Click it and Unblock the Notifications











