தற்கொலை செய்திருப்பேன்-மோனிகா
வழக்கில் சிக்கி சிறையில் இருந்த காலம் இருண்டது. இந்த கால கட்டத்தில் எனது குடும்பத்தினர் மட்டும் ஆதரவாக இல்லாமல் இருந்திருந்தால் நான் தற்கொலை செய்திருப்பேன் என்று நடிகை மோனிகா பேடி கூறியுள்ளார்.
தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியான அபு சலீமின் காதலி மோனிகா பேடி. நடித்துக் கொண்டிருந்த இவர் சலீமின் காதலியான பின்னர் நடிப்பை விட்டு விட்டு அவருடன் நாட்டை விட்டுத் தப்பி தலைமறைவாகி விட்டார்.சலீமும், பேடியும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களை சிபிஐ இந்தியாவுக்குக் கொண்டு வந்தது.
மோனிகா பேடி மீது போபால் நீதிமன்றத்தில் போலி பாஸ்போர்ட் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிலிருந்து நேற்று மோனிகா பேடி விடுதலை செய்யப்பட்டார்.
பெரும் நிம்மதியுடன் காணப்பட்ட மோனிகா பேடி, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிறையில் இருந்தகாலம் இருண்ட காலம். ஆனால் அங்குள்ள பெண் கைதிகளுக்கு நான் நடனம், யோகாசனம் போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தேன்.
எனது குடும்பத்தினர், குறிப்பாக எனது பெற்றோர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தனர். அது மட்டும் கிடைத்திருக்காவிட்டால், நிச்சயம் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.
இனிமேல் நடிப்புதான் எனது வாழ்க்கை. மீண்டும் நடிப்பேன். ஆனால் உடனடியாக நடிப்பேன் என்று கூற முடியாது. சில படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. கண்டிப்பாக மறுபடியும் நான் நடிப்பேன் என்றார் மோனிகா பேடி.


Click it and Unblock the Notifications











