‘முள்ளும் மலரும்’ ரஜினியை மீண்டும் கொண்டுவர நினைத்தேன்... மனம் திறக்கும் ரஞ்சித்
சென்னை: கபாலி திரைப்படம் மூலம் முள்ளும் மலரும் ரஜினியை தான் மீண்டும் கொண்டுவர நினைத்ததாக கபாலி திரைப்பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புக்கு இடையே கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ரஜினிகாந்தின் கபாலி திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ரஜினி ரசிகர்களில் கூட ஒருதரப்பினர் படத்தை கொண்டாடினாலும், மற்றொரு தரப்பினர் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ரஜினி என்ற ஒரு உச்ச நடிகருக்கான சரியான களத்தை, இயக்குனர் ரஞ்சித் உருவாக்கித்தரவில்லை என விமர்சகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

முள்ளும் மலரும்...
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு இயக்குனர் ரஞ்சித் அளித்துள்ளப் பேட்டியில், ‘எல்லோராலும் ரசிக்கப்பட்ட முள்ளும் மலரும் ரஜினியைதான், மீண்டும் திரையில் கொண்டு வர தாம் நினைத்ததாக' கூறியுள்ளார்.

பாராட்டு...
மேலும், இது தொடர்பாக அப்பேட்டியில் அவர் கூறுகையில், " முள்ளும் மலரும் படத்தில் மூலம் ஒரு திறமையான நடிகராக நம்மால் கொண்டாடப்பட்ட ரஜினியைதான் மீண்டும் திரையில் கொண்டுவர நான் நினைத்தேன். படத்தை பார்த்த பிறகு ரஜினி என்னை தொலைபேசியில் அழைத்து மிகவும் பாராட்டினார்.

ரஜினியின் கருத்து...
படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் அவர் கூறினார். இது வழக்கமான ரஜினி படம் இல்லை. நீங்க பயப்படாதீங்க டைரக்டர் சார். மக்கள்கிட்ட தைரியமாக படத்தை கொடுக்க, அவங்க பார்த்துப்பாங்கனு ரஜினி சார் சொன்னார்.

மலேசிய தமிழர்கள்...
பல ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் குடியேறிய தமிழர்கள், தற்போது வரை சந்தித்து வரும் இன்னல்களை தான் நான் படமாக்க நினைத்தேன். அதைத்தான் தந்திருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

கலவையான விமர்சனம்...
மேலும், கபாலி படத்தை மக்களுக்கு சீக்கிரமாக காட்டவேண்டும் என தான் விரும்பியதாகவும், தற்போது கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்பார்ப்பு...
அதேபோல், ‘இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவரும்போது, நிச்சயமாக ‘பாட்ஷா' மாதிரியோ, அல்லது வேறு மாதிரியோதான் எதிர்பார்த்து வருவார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால், ‘கபாலி' அந்த மாதிரியான படம் கிடையாது என்று தெளிவாக முன்பே சொல்லியிருந்தேன்' என விமர்சகர்களுக்கு அவர் விளக்கமும் அளித்துள்ளார்.

சோகம்...
கபாலி வசூல் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஞ்சித், பட ரிலீஸ் அன்றே திருட்டு விசிடியிலும் இந்த படம் வெளிவந்தது பெரிய சோகம் என வேதனை தெரிவித்துள்ளார். அது வெளியாகாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். இருந்தாலும் ‘கபாலி' படத்துக்கு மக்கள் ஆதரவு தரவேண்டும்" என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











