twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மனம் திறக்கிறார் ராஜேஷ்!

    By Staff
    |

    தமிழ் சினிமாவின் கண்ணியமான கலைஞர்கள் என்ற வரிசையில் நடிகர் ராஜேசுக்கு முக்கிய இடமுண்டு.

    கதாநாயகன் முதல் குணச்சித்திர கேரக்டர் வரை பல தரப்பட்ட வேடங்களில் முத்திரை பதித்தவர்.

    கன்னிப் பருவத்திலே மூலம் அறிமுகமாகி 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவர். அந்த ஏழு நாட்கள், அச்சமில்லை அச்சமில்லை,மக்கள் என் பக்கம், சிறை ஆகியவை ராஜேஷின் நடிப்பை பறை சாற்றியவை.

    சிவாஜி கணேசனின் தீவிர விசிறியான இவர் அவரது படங்களைப் நடிக்கவே வந்தாராம். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப்பணியாற்றியிருக்கிறார்.

    சினிமா வேட்கையால் அந்தப் பணியை துறந்தாலும் இன்னும் ஒரு ஆசிரியரின் மிடுக்கோடு தான் இருக்கிறார்.

    திரையுலகில் நுழைந்து 25 ஆண்டுகளை சமீபத்தில் பூர்த்தி செய்திருக்கிறார். தட்ஸ்தமிழ்.காம் வாசகர்களுக்காக தன் சினிமா வாழ்வின்அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

    ஓவர் டூ ராஜேஷ் ...

    1968ல் சென்னைக்கு வந்தேன். எனது முதல் படம், கன்னிப் பருவத்திலே, 1979ல் வெளிவந்தது. நான் பிறந்தது, கொஞ்ச காலம் வளர்ந்தது(அப்போதைய) மதுரை மாவட்டம் திண்டுக்கல்லில்தான்.

    எனக்கு பூர்வீகம் என்றால் அது பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமம் தான். பட்டுக்கோட்டையிலிருந்து 2 கிலோமீட்டர்.ரொம்ப அழகான ஊர்.

    அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்து வந்தார், அம்மா டீச்சர். அதனால், அவர்களுக்கு எங்கெல்லாம் மாறுதல் வருதோ அங்கெல்லாம்நாங்களும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தோம்.

    திண்டுக்கல்லில் பிறந்த நான் அங்கு 3, 4 வருஷம் இருந்தேன். பிறகு திண்டுக்கல்லுக்குப் பக்கத்தில் உள்ள வட மதுரைக்குப் போனோம்.அங்கே ஒரு ஐந்து வருஷ வாழ்க்கை. பிறகு தேனிக்குப் பக்கத்தில் உள்ள சின்னமனூர், அங்கே ஒரு 6-7 வருஷம், பிறகு காரைக்குடியில் 2வருஷம்.

    இப்படி பல ஊர்களுக்கு போய்க் கொண்டேயிருந்ததால், பல தரப்பட்ட மனிதர்களை, பலவித கலாச்சாரங்களைக் கொண்ட மனிதர்களை,பண்பாடுள்ள மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி 18 வயது வரை நான் வாழ்ந்து வந்தேன்.

    பிறகு, 1968ல் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தேன். எனக்கு சினிமா ஆசை வந்ததற்குக் காரணம் எனது அம்மாதான்.

    எனக்கு 8 வயது இருக்கும், அப்போது நான் 3வது படித்துக் கொண்டிருந்தேன். அந்த வயசில் எனக்கு கூச்ச சுபாவம். கூச்சம்னா, கூச்சம்அப்படியொரு கூச்சம். விளையாடக் கூட போக மாட்டேன், அதிக நண்பர்கள் கிடையாது. அப்படி ஒரு கூச்சம்.

    யார்கிட்டயும் பேச மாட்டேன், ஆனால் அன்பாக இருப்பேன், பேசத் தைரியம் இருக்காது. கோழைத்தன்மை கொண்டவனா இருந்தேன்.எனது அம்மாதான் எனது கூச்சத்தைப் போக்க, நாடகத்தில் நடிக்கச் சொன்னார். அவரது சொல்லை ஏற்று நாடகத்தில் நடிக்க ஆரம்பித்தேன்.

    அம்மாவுடன் வேலை பார்க்கும் சுப்பம்மா என்ற டீச்சன் மகன் ராஜேந்திரனும் நானும் ஒரு நாடகத்தில் நடிச்சோம். அவன் பொம்பள வேஷம்போட்டான், நான் ஆம்பள வேஷம். எஸ்.எஸ்.ஆர். அண்ணன் நடிச்ச தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில் வரும் நெனச்சது ஒன்னு நடந்ததுஒன்னு பாட்டுக்கு நாங்கள் ஆடினோம். அந்த நாடகத்துல ராஜேந்திரனுக்கு முதல் பரிசு, எனக்கு இரண்டாவது பரிசு.

    வீட்டுக்கு வந்தா அப்பா கேலி செஞ்சாரு, இவனெல்லாம் நடிக்கப் போகிறானா என்று. சொன்னா நம்ப மாட்டீங்க, வீட்டு மூலையிலஉட்கார்ந்து அப்படி வருத்தப்பட்டேன். நாம நல்ல நடிகனாகனும், சந்திரபாபு, சிவாஜி மாதிரி பெரிய நடிகனா வரணும். அப்பல்லாம்சந்திரபாபு ரொம்ப பேமஸ். பம்பரக் கண்ணால பாட்டு அந்த நேரத்துல ரொம்ப பாப்புலர், அதனால சந்திரபாபு மாதிரி வர வேண்டும்,சிவாஜி மாதிரி வர வேண்டும் என மனசுக்குள்ள ஒரு வெறியை ஏற்படுத்திக்கிட்டேன்.

    அப்புறம் கொஞ்சம் தெளிவு வந்த பிறகு, எனக்கு 3 குருக்கள் என்று ஏற்படுத்திக் கொண்டேன். அந்த 3 பேர் யாருன்னா, எம்.ஆர்.ராதா,சிவாஜி, எம்.ஜி.ஆர். இவர்களை மனதுக்குள் வைத்துத்தான் அடுத்தடுத்து நான் செயல்பட ஆரம்பித்தேன்.

    பிறகு 1968ல் சென்னைக்கு வந்தேன். சென்னைக்கு வந்த பிறகு ரெகுலராக ஆங்கிலப் படம், இந்திப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்குமுன்பும் ஆங்கிலப் படம் பார்ப்பேன், இந்திப் படம் பார்ப்பேன். ஆனால் கதை புரிந்து, நடிப்பவர்கள் யார் என்பது புரிந்து, டெக்னாலஜிபுரிந்து, ஆங்கிலம் புரிந்து ரெகுலராக பார்க்க ஆரம்பித்தது 68ல் சென்னைக்கு வந்த பிறகுதான்.

    என்னோட நடிப்புல சிவாஜியோட தாக்கம் அதிகம் இருந்ததா எங்க சித்தப்பா சொன்னார். உன் முகம், குரல், உருவ அமைப்பு எல்லாமேசிவாஜி மாதிரியே இருக்கு. அதனால் சிவாஜி படம் பார்க்கிறத முதல்ல நிப்பாட்டு, அப்பத்தான் உன் ஒரிஜினாலிட்டி வெளியே வரும்ன்னுசித்தப்பா சொன்னாரு. அதுக்குப் பிறகு சிவாஜி படம் பாக்கறதையே விட்டுட்டேன். 65ல் நெஞ்சிருக்கும் வரை படம்தான் நான் பார்த்தகடைசி சிவாஜிப் படம். அதற்குப் பிறகு பார்க்கவே இல்லை.

    அப்புறம் மகேந்திரனுக்காக தங்கப் பதக்கம் பார்த்தேன், பிறகு முதல் மரியாதை, தேவர் மகன், அப்புறம் ஒன்ஸ்மோர் ஆகிய படங்களைபார்த்தேன்.

    இடையில ஜெயகணேஷ் ட்ரூப்ல சேர்ந்து நாடகத்திலும் நடிச்சேன்.

    அப்ப, முத்தர்டன் ரோட்டுல ஒரு ஆங்கில நாடக குரூப் இருந்தது. அமெரிக்கன் ஸ்டேஜோ, இங்கிலீஷ் ஸ்டேஜோ, அதன் பெயர்நினைவில்லை, அங்க போய் ஆங்கில நாடக ரிகர்சல்களைப் பார்ப்பேன். நடிப்பு சொல்லிக் கொடுங்கன்னு கேட்பேன். அவங்களும் மெத்தட்ஆக்டிங், நேச்சுரல் ஆக்டிங் அது இதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க.

    நம்ம வி. கோபாலகிருஷ்ணன் கூட அந்த நாடக குரூப்ல தொடர்பு வச்சிருந்தார். நெறய நாடகங்கள் அவரும் நடிச்சிக்கிட்டிருந்தாரு. அவங்ககிட்ட பேசறப்ப, இந்தியாவிலேயே திலீப் குமார், பால்ராஜ் சஹானி, இவங்கதான் நேச்சுரல் ஆக்டிங்கை சிறப்பா செய்றவங்கன்னுசொன்னாங்க.

    இந்த நேரத்துலதான் எனக்கு அவள் ஒரு தொடர்கதையில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது.

    (ராஜேஷின் நினைவுகள் தொடரும்...)

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X