தொடர்ந்து நடிப்பேன்-ரஜினி
சிவாஜி எனது கடைசி படம் அல்ல. கடவுள் அனுமதித்தால் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சிவாஜி என்ற மாபெரும் விஷூவல் விருந்துக்காக ரஜினியின் ரசிகர்கள் கண்களை கழுவி வைத்து கலகலப்போடு காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சிவாஜி எனது கடைசி படமல்ல, கடவுள் அனுமதித்தால் மேலும் பல படங்களில் நடிக்க காத்திருக்கிறேன் என்று ரசிகர்களின் நெஞ்சில் பால் வார்த்துள்ளார் ரஜினி.சிவாஜி படம் வெளியாகவுள்ள நிலையில் அதுகுறித்து ரஜினி மனம் திறந்து பேசுகையில், திரைப்பட வரலாற்றில் சிவாஜி பெரும் புரட்சியை ஏற்படுத்தும்.
சிவாஜி மூலம் எனக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளார் ஷங்கர். இதற்காக அவருக்கு நன்றி கூற விரும்புகிறேன். கே.பாலச்சந்தருக்குப் பிறகு புதிய சிஷயங்களை சினிமாவில் அறிமுகப்படுத்த, பரீட்சித்துப் பார்ப்பவர் ஷங்கர் தான்.
பெரிதாக சிந்திக்கிறார், தனது கிரியேட்டிவிட்டியை சரியாக பயன்படுத்தி வெள்ளித் திரையில் புதுமை விருந்து படைக்கிறார். சமூகத்தைப் பாதிக்கும் விஷயங்களுக்கான தீர்வையும் தனது படங்களில் வைக்கிறார். அதையும் ஆணித்தரமாக வைப்பது ஆச்சரியமாக உள்ளது.
சிவாஜி படத்தில் ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், ஏவி.எம் என பெரியவர்கள் இணைந்துள்ளதால் இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்த எதிர்பார்ப்புகளை சிவாஜி பூர்த்தி செய்யும் என்றே நினைக்கிறேன்.
சிவாஜிதான் எனது கடைசி படம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது எனது கைகளில் இல்லை. கடவுள் அனுமதித்தால், மேலும் பல படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் என்றார் ரஜினி.
தலைவர் சொல்லிட்டார், அவரைப் பற்றித்தான் தெரியும்ல? ஒரு தடவை சொன்னா ....!


Click it and Unblock the Notifications











