ஒரு நேரத்தில் ஒரே படம்-ரிச்சா
ஒரு சமயத்தில் ஒரு படம்தான் நடிப்பேன். அதனால்தான் நான் இன்னும் எந்த மொழித் திரையுலகிலும் முன்னுக்கு வராமல் இருக்கிறேன் என்று கூறுகிறார் ரிச்சா பலோட்.
தமிழில் தனது அதிர்ஷ்டத்தைத் தேய்த்துப் பார்த்தும் எதுவும் தேறாததால் அங்குமிங்கும் அலைந்து திரிந்து ஏதாவது ஒரு மொழிப் படத்தில் அவ்வப்போது காணப்படுகிறார் ரிச்சா பலோட்.சினிமாவில் ஜொலிக்க நாயகிகளுக்கு ஒன்று நமீதா போல மார்க்கெட்டு சிறப்பாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஆசின் போல மார்க்கெட்டாவது சீராக இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் சேராதவர் ரிச்சா பலோட்.
விஜய்யுடன் நடித்தும் கூட இவரால் முன்னுக்கு வர முடியவில்லை. ஏன் இப்படி போய் விட்டீர்கள் என்று ரிச்சாவிடம் கேட்டால், நான் ரொம்ப காலமாகவே நடித்து வருகிறேன். இந்த நேரத்திற்கு நான் ஏகப்பட்ட படங்களில் நடித்து முடித்திருக்க வேண்டும்.
ஆனால் நான் நடித்து முடித்த படங்ளை விரல் விட்டு எண்ணி விடலாம். இத்தனைக்கும் நான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறேன்.
என்னைப் பொருத்தவரை இஷ்டத்திற்கு அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு சகட்டு மேனிக்கு நடிக்கப் பிடிக்காது. ஒரு நேரத்தில் ஒரு படத்தில்தான் நடிப்பேன். அதனால்தான் இவ்வளவு பெரிய கேப் விழுந்து விட்டது.
எனக்கு இன்னும் இளமை மிச்சமிருக்கிறது, ஓடிப் போய் விடவில்லை, ஒடிந்து போய் விடவில்லை. எனவே சாதிக்க இன்னும் காலம் இருக்கிறது, வயசும் இருக்கிறது. ஸோ, கவலைப்படாமல் நடித்து வருகிறேன் என்கிறார் படு கூலாக.
ரிச்சா பலோட் இப்போது நல்வரவு படத்தில் நடித்து வருகிறார். அவருடன் மதுமிதாவும் படத்தில் இருக்கிறார். இருந்தாலும் ரிச்சா கவலைப்படவில்லை.
இப்படத்தில் சினிமா உதவி இயக்குநர் வேடத்தில் நடிக்கிறாராம் ரிச்சா. உதவி இயக்குநராக இருந்து படிப்படியாக இயக்குநராக மாறி விடுகிறார். இந்த வேடத்தை சிறப்பாக செய்துள்ளதாக கூறும் ரிச்சா, தமிழில் இனி கூடுதல் கவனம் செலுத்தப் போவதாகவும் கூறுகிறார்.
ரிச்சா அடிக்கடி கவனம் வச்சா நல்லதுதான்!


Click it and Unblock the Notifications











