விஜய்க்காக என்னை மாற்றிக் கொண்டேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்!
சென்னை: மகன் விஜய்க்காக தன்னை மாற்றிக் கொண்டதாக இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மேடையில் பேசிய பேச்சு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
Recommended Video
இயக்குநர் சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரகனி, சாக்ஷி அகர்வால், பூர்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் நான் கடவுள் இல்லை.
சட்டம் ஒரு இருட்டறை, சாட்சி, நான் சிகப்பு மனிதன் படங்களை போலவே இந்த படத்தையும் உருவாக்கி இருப்பதாக நான் கடவுள் இல்லை படத்தில் பிரஸ் மீட்டில் எஸ்.ஏ. சந்திரசேகர் பேசியுள்ளார்.

பெயர் சர்ச்சை
நாகி ரெட்டி தான் என் மகனுக்கு விஜய் என பெயர் வைத்தார் என சில ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது. என் மகனுக்கு வடபழனி முருகன் கோயிலில் நான் தான் விஜய் என பெயர் வைத்தேன் என நடிகர் விஜய் பெயர் குறித்த சர்ச்சைக்கு மேடையிலேயே முற்றுப்புள்ளி வைத்தார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர்.

மகனுக்காக மாறினேன்
ஆரம்பத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்த் என முன்னணி இயக்குநர்களை வைத்து சட்டத்தை வைத்து உருவான கிரைம் த்ரில்லர் படங்களை எடுத்து ஹிட் கொடுத்து வந்த நான் என் மகன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், அவருக்காக என்னை மாற்றிக் கொண்டு இளைஞர்களை கவரக் கூடிய படங்களை எடுக்க ஆரம்பித்தேன் என மனம் திறந்து மேடையில் பேசியது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

அப்பா இயக்கத்தில்
நடிகர் விஜய் குழந்தை பருவத்திலேயே அவர் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கிய வெற்றி படத்தின் மூலம் அறிமுகமானார். செந்தூரப் பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர், நெஞ்சினிலே, சுக்ரன் என அப்பா இயக்கத்தில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மீண்டும் பழையபடி
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் தனது ரூட்டை மாற்றியதால் தான் சில சறுக்கல்களை சந்தித்ததாகவும் மீண்டும் பழையபடி சட்டத்தை கையில் எடுத்து உருவாக்கி உள்ள படம் தான் நான் கடவுள் இல்லை என உருவாகி இருப்பதாகவும், இதற்கு முன் தமிழ் சினிமாவில் இப்படியொரு கதை வந்ததே கிடையாது என்றும் உறுதி அளித்துள்ளார்.

கடவுளுக்கு கடிதம்
மேலும், தனது இயக்கத்தில் புதிதாக உருவாகி உள்ள நான் கடவுள் இல்லை படத்தின் கதை என்ன என்பது குறித்தும் ஓப்பனாக கூறியுள்ளார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர். ஏகப்பட்ட துயரங்களை சந்திக்கும் குழந்தை ஒன்று கடவுளுக்கு கடிதம் எழுதுவதும் அதனை தொடர்ந்து அந்த குழந்தையின் கஷ்டங்கள் எப்படி சரியாகின்றன என்பது தான் இந்த கதையின் கரு என்றே உண்மையை போட்டு உடைத்து விட்டார்.

நல்ல ஹீரோயின்கள்
மேலும், அந்த நிகழ்ச்சியில் ஹீரோயின்கள் பூர்ணா மற்றும் சாக்ஷி குறித்து பேசிய இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் இருவரும் தங்கமான ஹீரோயின்கள் என்றும் பொதுவாக இப்போதெல்லாம் நடிகைகள் படத்தில் நடிப்பதோடு பறந்து விடுகிறார்கள் என்றும், டப்பிங் செய்ய வேற ஆளை போட சொல்கின்றனர். புரமோஷனுக்கு வரவே மாட்டேன் என்பதை கொள்கையாக கொண்டுள்ளனர். ஆனால், பூர்ணா மற்றும் சாக்ஷி அகர்வால் அப்படி இல்லாமல் படம் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர் எனக் கூறினார்.
ஆந்திராவிலே செட்டில்
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் சமுத்திரகனி இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சமுத்திரகனி பற்றி பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் டோலிவுட்டில் நல்ல சம்பளம் கொடுப்பார்கள், அதற்காக அங்கேயே செட்டில் ஆகிடாதீங்க உங்களுடைய சேவை தமிழ் சினிமாவுக்குத் தேவை என கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











