தூய்மை பணியாளர் உயிரிழப்பு.. அரசாங்கத்தின் அலட்சியத்தால் நடந்த மரணம்.. கொந்தளித்த சனம் ஷெட்டி!
சென்னை: மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் வரலட்சுமி உயிரிழந்த சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசின் அலட்சியப்போக்கால் தூய்மைப்பணியின்போது உயிரிழந்த வரலட்சுமியின் மரணத்துக்கு உரிய நியாயம் வாங்க வேண்டும் என நடிகை சனம் ஷெட்டி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை கண்ணகி நகரில் உள்ள 'தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுக் குடியிருப்'பில் வசித்துவந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி, நேற்று அதிகாலை பணிக்கு சென்ற போது, சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவால் மரணமடைந்தார். இவருக்கு 11 வயதில் மகளும் 8 வயதில் மகனும் உள்ளனர். தூய்மைப்பணியாளராகப் பணியாற்றி வந்த இவரது வருமானத்தை நம்பித்தான் இவர்களது குடும்பம் இருக்கிறது. வரலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகை சனம் ஷெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.

அரசின் லட்சணம் இதுதான்: அதில், மின் கசிவு குறித்து மூன்று மாதமாக சரி செய்ய சொல்லியும் சரி செய்யாமல், இன்று ஒரு உயிர் பலியான பிறகு தான் அதை சரி செய்ய வேண்டும் என்கிற லட்சணத்தில் இந்த அரசாங்கம் இருக்கிறது. தூய்மை பணியாளரான வரலட்சுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்து உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மூன்று மாதமாகவே மின்வாரியத்திடம் இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் அளித்து இருக்கிறார்கள். அதை சரி செய்து தரும்படி பொதுமக்கள் பலமுறை கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு எங்களிடம் நிதி இல்லை, நீங்கள் வசூலித்து பணத்தை கொடுத்தால் நாங்கள் சரி செய்து தருகிறோம் என சொல்லி இருக்கிறார்கள்.
நிதி இல்லையா: எதை கேட்டாலும் நிதி இல்லை என்றால், மக்களை எப்படி காப்பாற்றுவது. விளம்பரம் செய்வதற்கு பணத்தை வாரி கொடுக்கும் அரசாங்கம். வரலட்சுமிக்கு, பாதுகாப்பு கவசத்தை வாங்கி கொடுத்திருந்தால் இன்று வரலட்சுமி உயிரோடு இருந்து இருப்பார். ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் போராடினார்கள் அவர்களை நீங்கள் வந்து பார்த்து என்ன குறை என்று கேட்கவில்லை. ஆனால், இரவோடு இரவாக அவர்களை அடித்து உதைத்து போராட்டத்தை தடுத்தீர்கள். இந்த தூய்மை பணியாளர் புதிதாக சேர்ந்தவர் தானே... உங்களுடைய புது திட்டத்தில் இணைந்தவர் தானே.. இவரையே நீங்கள் கைவிட்டு உள்ளீர்கள் என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை.
மரணத்திற்கு காரணம் அரசாங்கம்: ராம்கி தூய்மை பணியாளர் நிறுவனத்திடம் இருந்து 10 லட்சம், அரசாங்கத்திடம் இருந்து 10 லட்சம் கணவருக்கு அரசு பணி என விரைவாக தான் நடவடிக்கை எடுத்து உள்ளீர்கள். ஆனால், பறிபோன உயிருக்கு யார் பொறுப்பு. இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டது என மின் வாரியத்திற்கு ஃபோன் செய்து தகவல் கொடுத்த பிறகும், ஒரு மணி நேரம் கழித்து வந்து தான், சம்பவ இடத்திற்கு மின் வாரிய ஊழியர் வந்து, மின் இணைப்பை தூண்டித்து இருக்கிறார். இதில் யார் யார் சம்பந்தப்பட்டவர்கள் என அனைவரையும் அழைத்து, அவர்களிடம் நிச்சயம் விசாரணை நடத்த வேண்டும். இது ஒரு தற்செயலான மரணம் இல்லை... சென்னை மாநகராட்சி மற்றும் அரசாங்கத்தின் முழு அலட்சியத்தால் நடந்த ஒரு மரணம் என நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











