ராதாரவி பொருளை எடுத்து அவரையே போட்டுட்டாரே விஷால்.. எவ்வளவு நேக்கா சொல்றாருனு பாருங்க!
சென்னை: நடிகர் விஷால் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் எல்லாம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அவர் அந்த பேட்டியில் விருதுகள் குறித்து பேசியது சர்ச்சையாக பார்க்கப்படும் நிலையில், நடிகரும் நடிகர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி குறித்து பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அவர் அந்த பேட்டியில், " திமிரு படத்தின் படப்பிடிப்புக்காக நான் மதுரைக்கு போய்க்கொண்டு இருக்கும் போது, விமான நிலையத்தில் நடிகர் ராதாரவி அண்ணன் என்னைப் பார்த்து, நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிட்டயாடா என்று கேட்டார். நான் அப்போது இல்லை என்று சொன்னேன். உடனே என்னை உறுப்பினராக சேரச் சொன்னார். அதன் பின்னர் அவர் அமர்ந்திருந்த நடிகர் சங்க பொதுச்செயலாளர் நாற்காலியில் அவரை எதிர்த்து போட்டியிட்டு வென்று அமர்ந்துள்ளேன். இது எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டது அல்ல. நான் எனது வாழ்க்கை எனக்கு போகிற போக்கில் எது எல்லாம் கொடுக்கிறதோ அதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்கு ஏற்றவாறு என்னை மாற்றிக் கொள்கிறேன். எனது தந்தை என்னை அப்படித்தான் வளர்த்தார்" என்று பேசியுள்ளார்.

ராதாரவி பதில் அளிப்பாரா?: இவரது இந்த பேச்சைப் பார்த்த பலரும் விஷால் தனக்கு நடந்ததை சொன்னாலும், சினிமாவில் இருக்கும் பஞ்ச் வசனத்திற்கு அவர் சொன்ன நிகழ்வு சரியாக பொருந்துகிறதே என்று சொல்லி, " இதுதான் அவன் பொருளையே எடுத்து அவனையே போடுறதுனு அர்த்தம்" என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். விஷால் இந்த பேட்டியில் தேசிய விருதுகள் தொடங்கி பல விருதுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விருதுகளை நம்புவது இல்லை: அதாவது, " நான் விருதுகளை நம்புவதில்லை. விருதுகள் பைத்தியகாரத்தனம். 4 பேர் உட்கார்ந்து கொண்டு 7 கோடி மக்களுக்கு பிடித்த நடிகர், பிடித்த படம், பிடித்த துணை நடிகர் என்று தேர்வு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதைச் சொல்லும் அவர்கள் என்ன மேதாவிகளா? எனக்கு இது புரியவில்லை. தேசிய விருதுகளையும் தான் நான் கூறுகிறேன். அங்கு கமிட்டி உள்ளது.

குப்பைத் தொட்டியில் போடுவேன்: ஆனால் சர்வே எடுக்க வேண்டும். மக்கள் கருத்துதான் முக்கியம். அதை விட்டுவிட்டு, 8 பேர் சேர்ந்து கொண்டு இவர்கள்தான் சிறந்த நடிகர், சிறந்த நடிகை என்று கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை, அவை எருமை சாணிக்குச் சமம். நான் விருதுகள் பெற்றுள்ளேன், பெறவில்லை என்பது இங்கு முக்கியமில்லை. நான் அவற்றை நம்புவதில்லை. நான் சொல்கிறேன், நான் விருதுகள் வாங்குகிறேன் என்றால் அவற்றை போகிற வழியில் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு சென்றுவிடுவேன், அல்லது அந்த விருது தங்கமாக இருந்தால் அதை அடமானம் வைத்து, அந்த பணத்தில் அன்னதானம் செய்து விடுவேன்" என்று கூறினார். இவரது இந்த பேச்சும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நடிகர் ராதாரவி குறித்த பேச்சும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படி இருக்கும்போது விஷாலின் இந்த பேச்சுக்கு, ராதா ரவி தனது ஸ்டைலில் பிரமோஷன் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











