சினிமாக்காரர்களுக்கு கவுரவம் தந்தவர் எம்.ஜி.ஆர்தான் - கேயார்
சென்னை: சினிமாக்காரர்கள் என்றாலே வீடு தரமாட்டார்கள், பெண் தரமாட்டார்கள்... இந்த நிலையை மாற்றியவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்தான், என்றார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
எச் 3 சினிமாஸ் தயாரிக்கும் சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் வெளியிட தயாரிப்பாளர் சங்க செயலாளர், டி சிவா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குனர் சமுத்திரக்கனி, அருணாச்சலம் ஸ்டுடியோ எம் ஜெயக்குமர், நடிகர்கள் சுப்பு பஞ்சு, செளந்தரராஜா, அஜய் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

சாய்ந்தாடு சாய்ந்தாடு
வரவேற்புரையுடன் படம் உருவான விதத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் கே.எம்.ஜெகபர், "தம்பி கஸாலி எழுதிய சிறுகதைகளைத் தொகுப்பாக வெளியிட்டோம். அப்போது சேரன் வந்திருந்தார்.... தொடர்ந்து தமிழ்த் திரைப்படக் கலைஞர்களை வளைகுடா நாடுகளுக்கு அழைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம்... அப்போது உருவானது தான் சினிமா ஆர்வம்... அதே வேளையில் தம்பியும் நல்ல கதையை வைத்துக் கொண்டு முயற்சி செய்ய, சாய்ந்தாடு சாய்ந்தாடு உருவாகிவிட்டது.." என்றார்.

எம்ஜிஆர்தான்
கேயார் பேசும் போது, "முன்பெல்லாம் கலைஞர்களுக்கு வீடு கொடுக்கமாட்டார்கள், ஏன் தண்ணீர் கூட கொடுக்கமாட்டார்கள்... ஆனால், அதனை முதல் முறையாக மாற்றிக் காட்டியவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர் முதல்வரான பிறகுதான் கலைஞர்களும் சமுதாயப் பொறுப்பு மிக்கவர்கள் என்கிற எண்ணம் மக்களுக்கு வந்தது...

மருத்துவத் துறை அவலம்
சாய்ந்தாடு சாய்ந்தாடு படத்தினையும் ஒரு சமூக உணர்வோடு மருத்துவத்துறையில் நடைபெறும் ஒரு அவலத்தைச் சுட்டிக் காட்டி இயக்கியிருக்கிறார் இயக்குனர் கஸாலி.... படம் வெற்றிபெற வாழ்த்துகள்..." என்று பேசிய கேயார், "வளைகுடா தொழிலதிபர் தயாரிப்பாளர்கள் இங்கு இருக்கும் சிறிய தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து படங்கள் தயாரித்தால் அவர்களுக்கும் லாபத்தில் ஒரு பங்கு கிடைக்கச் செய்யவேண்டும்," என்று கேட்டுக் கொண்டார்.

சமுத்திரக் கனி
இயக்குனர் சமுத்திரக் கனி பேசும்போது, " ஒரு பத்திரிக்கையாளராகத்தான் கஸாலியைத் தெரியும்... திடீரென்று ஒரு படம் இயக்கப் போகிறேன் என்றார்... அவர் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றவில்லை அதனால் எனது படத்தில் பணியாற்று. அப்புறம் படம் இயக்கலாம் என்று சொன்னேன்... அதற்குப் பிறகு ஆளையே காணோம்... இதோ நான் எந்தப் படத்தில் அவரைப் பணியாற்ற அழைத்தேனோ அந்தப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடந்த 10 நாட்களில் அவரும் அவருடைய படத்தினை முடித்து விட்டுப் பாடல்கள் வெளியிட்டிருக்கிறார் என்றால் அவரது அசாத்தியமான தன்னம்பிக்கையைப் பாராட்டியே ஆகவேண்டும்..," என்றார்.

பாண்டியராஜன்
இயக்குனர் நடிகர் பாண்டியராஜன் பேசும் போது, "பொதுவாக சாதனையாளர்களை வீட்டில் உள்ளவர்கள் அங்கீகரிப்பதில்லை... அந்த நிலையில் தனது தம்பியின் திறமையை அறிந்து தானே படத்தினைத் தயாரிக்க முன் வந்திருக்கிறார் என்றால் உண்மையில் தயாரிப்பாளர் எம் ஜெகபர் போற்றுதலுக்குரியவர்.." என்றார்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் நடிகர் சுப்பு பஞ்சுவும், "சிறிய படங்கள் தாம் திரைப்படத்துறையின் முதுகெலும்புகள்... அவைகள் தாம் திரைப்பட உலகை வாழவைக்கின்றன..,"என்று பேசினார்கள்.

தொடர்ந்து 5 படங்கள்
இந்தப்படம் வெற்றிபெற்றால் தொடர்ந்து 5 படங்கள் தயாரிக்க இருப்பதாகவும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் மேலும் பல தொழிலதிபர்களைத் திரைப்படத் தயாரிப்புக்குக் கொண்டு வருவதாகவும் தயாரிப்பாளர் எம் ஜெகபர் சொன்னதை நினைவு கூர்ந்தார் நடிகர் செளந்தரராஜா.

சிறிய படங்கள்
"சிறிய படங்களை விநியோகிக்க முடியவில்லை, வி நியோகஸ்தர்களின் விருப்பத்திற்கு எப்படி படம் எடுக்க முடியும் என்று எஸ்.எஸ்.குமரன் ஆதங்கப்பட்டார். அதற்குப் பதிலளித்த டி.சிவா, "சிறு படங்கள் வெளியிடுவது சம்பந்தமாக ஒரு நல்ல சூழ்நிலையை ஜனவரி 2014 முதல் ஏற்படுத்தவுள்ளோம்...,"என்றார்.


Click it and Unblock the Notifications











