சிவாஜிக்கு எப்போதும் யாரும் போட்டி இல்லை - ரஜினி பேச்சு
சிவாஜியின் அன்னை இல்லத்தில், விக்ரம்பிரபு தயாரித்து, நடித்திருக்கும் 'நெருப்புடா' படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடியோவை ரஜினி வெளியிட்டார்.
சென்னை: நெருப்புடா திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி, சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ரஜினி, சத்யராஜ், விஷால், தனுஷ், விவேக், விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிரபு உள்பட திரையுலகைச் சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.

'நெருப்புடா' திரைப்படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். இப்படத்தில் புதுமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கியுள்ளார்.விக்ரம் பிரபு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சிவாஜியின் அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ஆடியோவை ரஜினி வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது: இப்போது இந்த தாடியுடன் இங்கு நான் வருவதை சிவாஜி பார்த்திருந்தால், 'என்னடா எனக்குப் போட்டியா?' எனக் கேட்டிருப்பார். ஆனால் அவருக்கு இப்போதும் அல்ல எப்போதும் போட்டிக்கு ஆள் கிடையாது.
அன்னை இல்லம் குறித்து எனக்கு நல்ல நினைவுகள் இருக்கின்றன. 1978ல் சிவாஜி உனக்கு ஞாயிற்றுக்கிழமை ஷூட்டிங் இல்லையென்றால் வீட்டுக்கு வா என்று கூப்பிட்டிருந்தார். பிரியாணி போடுகிறேன் வா என்றார். நானும் வந்தேன்.
ஏதோ என்னை மட்டும்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்து வந்தேன். ஆனால் இங்கு வந்து பார்த்தால் 300க்கும் மேல் ஆட்கள் உணவருந்திக் கொண்டிருந்தார்கள். 22 வகையான உணவு வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது.
அப்போதுதான் கேள்விப்பட்டேன் அனைத்துத் தரப்பு மக்களும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இங்கு வந்து உணவு உண்டு செல்வார்கள் என்று.
சிவாஜியின் பெயரை விக்ரம் பிரபு காப்பாற்ற முயற்சி செய்து வருகிறார். அந்த முயற்சி உங்களைக் காப்பாற்றும். இவ்வாறு ரஜினி பேசினார்.


Click it and Unblock the Notifications











