எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் தொடங்கி விஜய்யின் தெறியை தாண்டிய கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்!
சென்னை: "நான் யார்.. நான் யார்.. நீ யார்" என எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் திரைப்படத்தில் பாடல் எழுதி தனது திரைப்பயணத்தை தொடங்கிய பழம்பெரும் பாடலாசிரியர் கவிஞர் புலமைப்பித்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
தமிழ் சினிமாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதி ஏகப்பட்ட ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பிடித்தவர் கவிஞர் புலமைப்பித்தன்.
எம்ஜிஆர் தொடங்கி விஜய் வரை ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல் எழுதிய புலமைப்பித்தனின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

புலமைப்பித்தன் காலமானார்
அதிமுக முன்னாள் அவைத்தலைவராக செயலாற்றி வந்த கவிஞர் புலமைப்பித்தன் கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். காலத்தினால் அழியாத ஏகப்பட்ட பாடல்களை புலமைப்பித்தன் சினிமா உலகிற்கு தந்துள்ளார்.

எம்ஜிஆர் படங்களுக்கு
புரட்சி தலைவர் எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற குடியிருந்த கோயில் படத்தில் இடம்பெற்ற "நான் யார்" பாடல் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் புலமைப் பித்தன். தொடர்ந்து அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உலகம் சுற்றும் வாலிபன் என ஏகப்பட்ட படங்களுக்கு இவர் பாடல்களை எழுதி உள்ளார்.

எஸ்பிபி அறிமுக பாடல்
மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அறிமுக பாடலான ஆயிரம் நிலவே பாடலையும் இவர் தான் எழுதினார். கண்ணதாசன், வாலி போன்ற ஜாம்பவான்கள் நிறைந்த காலத்திலும் தரமான தமிழ் சினிமா பாடல்களை எழுதிய புலமைப்பித்தன் மீது எம்ஜிஆருக்கு அளவு கடந்த மரியாதை இருந்தது.

இது நம்ம ஆளு
எம்ஜிஆர் படங்களுக்கு வரிசையாக பாடல்களை எழுதி வந்த கவிஞர் புலமைப் பித்தன் பாக்கியராஜ் நடித்த இது நம்ம ஆளு திரைப்படத்தில் இடம் பெற்ற "அம்மாடி இது தான் காதலா" மற்றும் "காமதேவன் ஆலயம்" உள்ளிட்ட பாடல்களை எழுதி அசத்தி இருந்தார். அந்த படத்தின் ஹைலைட்டான 'நான் ஆளான தாமரை" பாடலை வாலி எழுதியிருப்பார்.

ராத்திரியில் பூத்திருக்கும்
இயக்குநர் ஜகநாதன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இடம்பெற்ற "ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ" பாடலையும் எழுதியவர் கவிஞர் புலமைப்பித்தன் தான். ரஜினிகாந்தின் பணக்காரன், சிவா உள்ளிட்ட பல படங்களுக்கும் இவர் பாடல்களை எழுதியுள்ளார்.

நாயகன் பட பாடல்கள்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே பாடலை தவிர மற்ற அனைத்து சூப்பர் ஹிட் பாடல்களையும் எழுதியவர் புலமைப்பித்தன் தான். அந்த ஒரு பாடலை மட்டும் இசையமைப்பாளர் இளையராஜாவே எழுதி இருந்தார். "நான் சிரித்தால் தீபாவளி". "நீ ஒரு காதல் சங்கீதம்" என அத்தனை பாடல்களுமே இன்றளவும் சூப்பர் ஹிட்.

விஜய்யின் தெறி படத்தில்
இயக்குநர் அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் இடம்பெற்றிருந்த "தாய்மை" பாடலையும் எழுதியது புலமைப்பித்தன் தான். வடிவேலுவின் இம்சை அரசன், தெனாலி ராமன் உள்ளிட்ட படங்களுக்கு பாடல் எழுதிய இவர் கடைசியாக வடிவேலு நடித்த எலி படத்தில் இடம்பெற்ற பாடலை எழுதி இருந்தார். கலைஞர்களின் படைப்பு இருக்கும் வரையில் கலைஞர்களுக்கு எப்போதுமே மரணமில்லை.


Click it and Unblock the Notifications











