என்னவளே அடி என்னவளே..மந்திரக்குரல் நாயகன் உன்னி கிருஷ்ணனின் பிறந்தநாள்!
சென்னை : தனது இனிமையான குரல் மூலம் இந்திய மக்கள் அனைவரையும் மெய் மறக்க வைத்த பாடகர் உன்னி கிருஷ்ணன் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.
தற்போது முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா, விஜய், அஜித் என பல நடிகர்களுக்கு தனது குரலின் மூலம் பல பாடல்களை பாடியுள்ள உன்னி கிருஷ்ணனுக்கு இன்று பிறந்தநாள்.
ஜூலை 9 ஆம் தேதியான இன்று இவர் தனது 54வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை பொழிந்த வண்ணம் இருக்கின்றனர்.

பல பாராட்டுக்கள்
தமிழ் பாடகர்கள் எப்பொழுதும் இந்திய அளவில் மிகப் பெரிய பெயரையும் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இவ்வாறு இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களில் படங்களில் பணியாற்றிய பாடகர்கள் இன்றளவும் பலரால் போற்றப்பட்டு வருகின்றன.

என்னவளே அடி என்னவளே
அந்த வகையில் தனது மெல்லிய குரலால் பல பாடல்களைப் பாடி அனைவரையும் மயக்கி வைத்து வந்த பாடகர் உன்னி கிருஷ்ணன் தமிழில் எக்கச்சக்க சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். முதன்முதலில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் "என்னவளே அடி என்னவளே" என்ற பாடல் மூலம் தமிழ் திரைத்துறைக்குள் இவரின் குரல் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பலருக்கும் இவர் விருப்பப் பாடகராக இருந்து வருகிறார்.

ஏராளமான பாடல்கள்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை தன் வாழ்நாளில் பாடியுள்ள உன்னிகிருஷ்ணன் படத்தில் இடம்பெறாத சில பக்தி பாடல்களையும், ஆல்பம் பாடல்கள் என திரைப்படம் அல்லாத பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மாயக்குரல்
இவ்வாறு ஏ ஆர் ரஹ்மான் இசையில் காதலன் திரைப்படத்தில் தனது குரலை அறிமுகம் செய்த உன்னிகிருஷ்ணன் மீண்டும் ஆர் ரஹ்மான் இசையில் பவித்ரா என்ற படத்தில் "உயிரும் நீயே" என்ற பாடலைப் பாடினார். இந்த பாடலுக்காக தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று, மீனம்மா அதிகாலையிலும், ஓ வெண்ணிலா போன்ற நம் மனதை மயக்கும் பாடல்களை பாடி தன்னுடைய மாயக்குரலால் நம்மை கட்டிப்போட்டுள்ளார்.

அனைவரையும் மகிழ்வித்தார்
தனது குரலை பாடல்களின் மூலம் நம் அனைவரையும் மெய் மறக்க வைத்த உன்னிகிருஷ்ணன் தற்போதுள்ள தலைமுறை ரசிக்கும் படியும் பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார். நண்பேண்டா, ஆதவன் போன்ற தற்போதுள்ள நடிகர்களுக்கும் தனது இனிமையான குரலால் பாடல்களை பாடிவரும் உன்னிகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக வந்தும் அனைவரையும் ரசிக்க வைத்தார்.

தேசிய விருது
மயக்கும் மந்திரக்குரலால் நம்மை கட்டிப்போட்ட உன்னி கிருஷ்ணனின் மகளும் ஒரு பாடகராவார். உத்ரா உன்னிகிருஷ்ணன், ஏ. எல். விஜய் இயக்கத்தில் வெளியான சைவம் என்ற படத்தின் மூலம் இளம் பாடகராக அறிமுகம் ஆனார். இவர் பாடிய "அழகு" என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். இளம் வயதில் தேசிய விருதை பெற்ற பாடகர் என்ற பெருமைக்குரியவர் உத்ரா உன்னிக்கிருஷ்ணன்.

இன்று பிறந்த நாள்
நம் அனைவரின் வாழ்க்கையிலும் அனைத்து தருணங்களிலும் தனது குரலை பாடல்களாக ஒலிக்கச் செய்து பல இனிமையான தருணங்களை ஏற்படுத்தி வரும் உன்னி கிருஷ்ணன் இன்று தனது பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்துடன் மிக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். இன்று இவர் தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடி வருவதையொட்டி இவரது மெல்லிய குரலால் மயங்கிய ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணியாற்றிய திரை பிரபலங்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை பொழிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











