'பசுமை கலாம்' திட்டத்துக்கு இலவச மரக்கன்றுகள்! - முதல்வருக்கு நடிகர் விவேக் கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இந்தியா முழுவதும் 100 கோடி மரக்கன்றுகள் நடப்பட வேண்டுமென்று அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நடிகர் விவேக் தன்னுடைய பெயரில் செயல்படும் நற்பணி மன்றங்களும், எக்ஸ்னோரா அமைப்பும் சேர்ந்து, தமிழ்நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் 10 லட்சம் மரக்கன்றுகள் நட ஏற்பாடு செய்யும் என்று அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்துக்கு பசுமை கலாம்' திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தின் எதிரொலியாக முதல் மரக்கன்று திருச்சியில் நடப்பட்டது.
தொடர்ந்து ஆங்காங்கு உள்ள பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் போன்ற வளாகங்களில் இந்த மரக்கன்றுகளை, மாணவர்களை பயன்படுத்தி நடுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. பல தனியார் நிறுவனங்கள், தனியார் இந்த திட்டத்தில் பங்கு பெற ஆர்வத்தோடு இருக்கிறார்கள். வாகை, வேம்பு, பிளேம் ஆப் த பாரஸ்ட் போன்ற வகையான மரக்கன்றுகள் இந்த திட்டத்தின்கீழ் நடப்படுகின்றன.
இந்த நிலையில், நடிகர் விவேக் நேற்று தமிழக அரசு வனத்துறை அமைச்சர் பச்சைமால் சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தார்.
இந்த திட்டத்தை நிறைவேற்ற மாணவர்கள், இளைஞர்கள் உள்பட ஏராளமானவர்கள் தயாராக இருக்கிறார்கள். மொத்தத்தில் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் இருக்கிறது. வனத்துறை மூலமாக எவ்வளவு மரக்கன்றுகளை இலவசமாக தர முடியுமோ, அவ்வளவு மரக்கன்றுகளை தருவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு மனுவை கொடுத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் பச்சைமால், இதுகுறித்து முதல்வரின் உத்தரவை பெற்று தகுந்த ஏற்பாடுகள் செய்யப்படும் என்று உறுதி அளித்ததாக விவேக் கூறினார்.


Click it and Unblock the Notifications











