தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்ட தடை விதிக்க வேண்டும் - கமிஷனரிடம் பாபுகணேஷ் புகார்

நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பாபுகணேஷ் நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "நான், 'பாலவிக்னேஷ் கிரியேஷன்ஸ்' என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். 10 படங்களை தயாரித்துள்ளேன். 10 படங்களை டைரக்டு செய்துள்ளேன். 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளேன்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் 4-ந் தேதி அன்று (நாளை) நடைபெறும் என்று அதன் தலைவராக தன்னை பிரகடனம் செய்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக சென்னை 5-வது சிட்டிசிவில் கோர்ட்டில் வழக்கு உள்ளது. 5-ந் தேதி அன்று அந்த வழக்கில் விசாரணை நடைபெற உள்ளது.
அதற்குள்ளாக எஸ்.ஏ.சந்திரசேகரன் 4-ந் தேதி அன்று பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார். பொதுக்குழு கூட்டம் ஆயிரம் விளக்கில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தில் 200 பேர்தான் உட்கார முடியும். ஆனால் பொதுக்குழு உறுப்பினர்கள் 1900 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
கண்டிப்பாக அந்த கூட்டத்தில் தகராறு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே அதை தடை செய்யவேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். ஒருவேளை தடை செய்யமுடியாவிட்டால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவேண்டும் என்று கேட்டுள்ளேன்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனரை விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











