சினிமா திரையரங்குகளில் கட்டணம் குறையுமா?

தற்போது மல்டி பிளக்ஸ் அரங்குகளில் அதிகபட்சமாக ரூ.120 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சென்னை நகரம் தவிர்த்த பிற நகரங்களில் இந்த அளவு கட்டணம் வசூலிக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் நிறைந்த நவீன பல்திரை அரங்குகளுக்கு மட்டுமே இந்த அதிகபட்ச கட்டணம் பொருந்தும்.
ஆனால் சென்னைக்கு வெளியில் உள்ள பல திரையரங்குகளும் தாறுமாறாக கட்டணங்களை உயர்த்தி வசூலிக்கின்றன.
எனவே டிக்கெட் கட்டணத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். குளிர்சாதன தியேட்டர்களுக்கும் குளிர் சாதன வசதியில்லாத தியேட்டர்களுக்கும் தனித்தனி கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டும் என்றும், தியேட்டர்களில் குறிப்பிட்ட காட்சிகள்தான் திரையிட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
"இப்போது தியேட்டர்களில் 4 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் 5 காட்சிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதைத் தவிர்த்து, எத்தனை காட்சிகள் வேண்டுமானாலும் வசதிப்படி திரையிட்டுக் கொள்ள அரசு உத்தரவிட வேண்டும். தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம்," என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பேரவை தலைவர், அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
இந்த கோரிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணம் முறைப்படுத்தப்பட்டால், ஒற்றைத் திரை கொண்ட அரங்குகளின் கட்டணங்கள் குறையும் எனத் தெரிகிறது. அதேபோல மல்டிப்ளெக்ஸ் என்ற பெயரில், டப்பா திரையரங்குகளில் தாறுமாறாக வசூலிக்கப்படும் கட்டணத்திலும் மாறுதல் வரும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











