செல்வமணியுடன் சொந்த ஊரில் ரோஜா பிரசாரம்

ஆந்திர மாநிலத்தில் லோக்சபாவுடன் சேர்த்து சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக தெலுங்கு தேசம், காங்கிரஸ், சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் குதித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணித் தலைவியான ரோஜாவும் தனது தேர்தல் பிரசாரத்தை படு வேகமாக தொடங்கி விட்டார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் நகரி தொகுதியில் போட்டியிட்டு மயிரிழையில் தோல்வியைத் தழுவினார் ரோஜா. உள்ளூர் கட்சிப் பிரமுகர்கள் சிலர் கடைசி நேரத்தில் கவிழ்த்தியதால் தோல்வியைத் தழுவ நேரிட்டார் ரோஜா.
இந்த முறை அவர் திருப்பதி அருகே உள்ள சந்திரகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில்தான் ரோஜாவின் பிறந்த ஊரான பாக்ராப்பேட்டை உள்ளது. இதனால்தான் இந்தத் தொகுதியை கேட்டு வாங்கியுள்ளார் ரோஜா.
இந்த நிலையில் நேற்று தனது கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் பாக்ராப்பேட்டைக்கு வந்தார் ரோஜா.
தங்களது ஊர் பெண் வரும் தகவல் அறிந்ததும் பாக்ராப்பேட்டையே திருவிழாக் கோலமாக காணப்பட்டது. கணவர், கட்சி நிர்வாகிகளுடன் ஊருக்குள் நுழைந்த ரோஜா, வீடு வீடாக நடந்து சென்று அனைவரையும் சந்தித்து நலம் கேட்டார். கூடவே வாக்கு வேட்டையும் நடத்தினார்.
ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அவர் பாசத்துடன் விசாரித்தது கிராம மக்களைக் கவர்ந்தது. மேலும், தான் விளையாடி இடம், தன்னை தூக்கி எடுத்து வளர்த்த தாத்தா, பாட்டிகள் உள்ளிட்டோரையும் அவர் நினைவு கூர்ந்து பேசியது கிராம மக்களை நெகிழ வைத்தது.
தனது பால்ய கால தோழிகளையும் அவர் பாசத்துடன் நலம் விசாரித்து மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஊரில் ஒருவரையும் விடாமல் தேடித் தேடி நலம் விசாரித்தார். கூடவே தெலுங்கு தேசத்தின் சின்னமான சைக்கிளுக்கு மறக்காமல் ஓட்டுப் போடுங்கள் என்றும் அன்புடன் கேட்டுக் கொண்டார்.
பிறந்த ஊருக்கு கணவருடன் வந்து ரோஜா வாக்கு சேகரித்த விதமும், நலம் விசாரித்த விதமும் தங்களைக் கவர்ந்து விட்டதாக ஊர் மக்கள் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











