விபத்தில் உயிரிழந்த ரசிகர் குடும்பத்துக்கு ரஜினி ரூ 4 லட்சம் உதவி!

மதுரையில் நடந்த மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள குடும்பத்துடன் சென்றிருந்தார் ரஜினி. அப்போது அவரது காரைப் பின் தொடர்ந்து கார்கள் மற்றும் வாகனங்களில் சென்றனர் மதுரை ரசிகர்கள். அப்போது எதிர்பாராதவிதமாக ரசிகர்கள் வந்த டாடா சுமோ கவிழ்ந்துவிட, அதில் பயணம் செய்த கார்த்திக் என்ற ரசிகர் பரிதாபமாக இறந்தார். உடன் வந்தவர்களில் இரு ரசிகர்களுக்கு காயம் ஏற்பட்டது.
உடனடியாக இந்த விஷயம் ரஜினியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. மிகவும் மனம் வருந்திய ரஜினி, கார்த்திக்கின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், கார்த்திக்கின் குடும்பத்தினரை விரைவில் சந்தித்து ஆறுதல் கூறவிருப்பதாகவும், உதவி செய்யப் போவதாகவும் கூறியிருந்தார்.
அதன்படி நேற்று கார்த்திக்கின் குடும்பத்தினர் அனைவரையும் சென்னை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார் ரஜினி. மதுரை மாவட்ட மன்ற நிர்வாகிகள் அவர்களை அழைத்து வந்தனர்.
கார்த்திக்கின் தாய் தந்தைக்கு ஆறுதல் கூறிய ரஜினி, அவர்களிடம், "உங்கள் இழப்புக்கு ஈடாக எதையுமே யாராலும் செய்ய முடியாது. இருந்தாலும் இப்போது சிறிய நிதியுதவியை அளிக்கிறேன்" என்று கூறி, ரூ 4 லட்சத்தை வழங்கினார்.
இந்தத் தொகையில் கார்த்திக்கின் இரு சகோதரிகளுக்கும் தலா ஒரு லட்சம் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி அதற்கான ஆவணங்களைத் தந்தார். கார்த்திக்கின் பெற்றோரிடம் ரூ 2 லட்சம் ரொக்கத்துக்கான காசோலையை வழங்கினார்.
கார்த்திக் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த ரஜினி, அவரது புகைப்படங்களையும் வாங்கிப் பார்த்தார். ரசிகர்கள் பொறுமையுடனும் நிதானத்துடனும் செயல்படவேண்டும் என்றும் அவசரப்பட்டு இதுபோன்ற விபத்துக்களில் சிக்கிக்கொள்ளாமல் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
எதிர்காலத்தில் தேவைப்படும் உதவிகளைச் செய்வதாகவும் அவர்களுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.


Click it and Unblock the Notifications











