அரசியல் பாதையில் விஜய்-ஜெயலலிதாவை சந்திக்க முடிவு?
சென்னை: நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் வேகம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இன்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்திக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், அரசியல் பிரவேசத்திற்கு முன்பு தனது பலத்தை காட்டும் வகையில் பிரமாண்டமான முறையில் ரசிகர் மன்ற மாநாட்டை நடத்தவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். சமயம் வரும்போது அதுகுறித்து அறிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். அதேசமயம், சமீபத்தில் டெல்லி போய் ராகுல் காந்தியையும் சந்தித்தார். இதனால் அவர் காங்கிரஸில் சேருவாரோ என்ற பேச்சு அடிபட்டது. ஆனால் காங்கிரஸில் சேரும் முயற்சி தோல்வியில் முடிந்தது.
இதற்டையில் கடந்த வாரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென அழைத்துப் பேசினார். தொகுதிகளில் உள்ள செல்வாக்கு, தனி கட்சி துவங்கலாமா அல்லது வேறு கட்சியில் இணையலாமா? புது கட்சி துவங்கினால் யாருக்கு ஆதரவு அளிக்கலாம் என்றெல்லாம் கருத்து கேட்டதாகக் கூறப்படுகிறது. பெரும்பான்மை நிர்வாகிகள் தனிக்கட்சி துவங்க வலியுறுத்தினார்கள். மேலும் பொங்கலுக்கு முன்பே புதுக் கட்சியை அறிவித்து விடுங்கள் என்றும் விஜய்யை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் தனிக்கட்சி மூலம் அரசியல் களத்தில் இறங்கலாம் என அவர் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன் தன் ரசிகர்களை வைத்து பிரமாண்ட மாநாடு நடத்தி பலத்தைக் காட்டவும் முடிவெடுத்துள்ளாராம்.
இந்த மாநாட்டில் அரசியல் முடிவை அறிவிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலின் போதே, விஜய் பெரிய அரசியல் கட்சியொன்றுக்கு இந்தத் தேர்தலில் ஆதரவளிக்கக் கூடும் என்றும், அந்தக் கட்சி அதிமுகதான் என்றும் கூறப்படுகிறது.
இதைவிட முக்கியம், விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனும் இன்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசப் போவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் போயஸ் கார்டனில் இப்போதே பரபரப்பாக நிருபர்கள் குழும ஆரம்பித்துள்ளனர்.
அரசியல் வானில் அடுத்த நட்சத்திரம். 'சூரியனின்' வெப்பத்தில் சிக்கி 'உருகுமா' அல்லது 'உதைக்குமா' என்பது போகப் போகத்தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











