நடிகை சுஜாதா உடலுக்கு கமல் உள்ளிட்ட கலைஞர்கள் அஞ்சலி: இன்று மாலை அடக்கம்

சுஜாதா கடந்த 1952-ம் ஆண்டு இலங்கையில் பிறந்தார். அவரது தாய் மொழி மலையாளம் ஆகும். அவரது சொந்த ஊர் கேரளாவில் உள்ள காலே. அவரது கணவர் பெயர் ஜெயகர். இந்த தம்பதிக்கு சஜித் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.
சுஜாதா கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன.
கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை.
சென்னையில் வசித்து வந்த அவர் கடந்த சில காலமாக உடல்நலக்குறைவிற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
அவரது உடல் சென்னை நீலாங்கரை பீச்ரோட்டில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நடிகர், நடிகைகள் பலர் இன்று காலை அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர்கள் கமலஹாசன், சிவகுமார், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை லட்சுமி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சுஜாதா உடல் இன்று மாலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











