விசா மோசடி: பட்டியலில் சிரிப்பு நடிகர், பிரபல இயக்குநர்
அமெரிக்காவுக்கு ஆட்களைக் கடத்திய விவகாரத்தில் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த முக்கிய சிரிப்பு நடிகரும், முக்கிய இயக்குநர் ஒருவரும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான பட்டியலை அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கியுள்ளனர்.
தனது மேக்கப் உதவியாளர் என்ற போர்வையில் ஸ்ரீலதா என்ற ஆந்திரப் பெண்ணை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல அமெரிக்க துணைத் தூதரகத்தில் விண்ணப்பித்து சிக்கியுள்ளார் நடிகை புளோரா. பணம் பெற்றுக் கொண்டு ஸ்ரீலதாவை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து புளோரா, ஸ்ரீலதா, புரோக்கர் வெங்கட் ரெட்டி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து திரையுலகுக்கு அடுத்த அடியைக் கொடுத்தது அமெரிக்க துணைத் தூதரகம். தென்னிந்தியாவைச் சேர்ந்த 200 நடிகர், நடிகைகள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க தூதரகம் அறிவித்தது.
இவர்கள் அனைவரும் ஆள் கடத்தில் ஈடுபட்டுள்ளதாகவம், எனவே இனிமேல் இவர்கள் அமெரிக்கா செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அமெரிக்க துணைத் தூதரக் டேவிட் ஹாப்பர் அறிவித்தார்.
இந்தத் தடை உத்தரவைக் கேட்டு தமிழ்த் திரையுலகினர் அதிர்ந்து போயுள்ளனர். யார் பெயர் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்ற ஆர்வம் அவர்களிடையே எழுந்துள்ளத.
இந்த நிலையில் முக்கிய நடிகர், நடிகைகள் பத்து பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கியுள்ளது.
இந்தப் பட்டியலில் முதல் நபராக முக்கிய சிரிப்பு நடிகரின் பெயர் இடம் பெற்றுள்ளதாம். படங்களில் தத்துவத்தையும், உபதேசத்தையும் அதிகம் போதிப்பவர் இந்த நடிகர். மூடப் பழக்க வழக்கங்களையும், முட்டாள்தனங்களையும் சரமாரியாக விளாசுவது இவரது வழக்கம். ஆனால் இவரே வாஸ்து பார்த்துதான் புது வீடு கட்டியதாக கூறுவார்கள்.
ஆனால் அவரே இப்போது ஆள் கடத்தல் மோசடியில் சிக்கியுள்ளாராம். இவர் சமீபத்தில் பலருடன் அமெரிக்கா சென்றார். அவர் கூட சென்ற யாருமே திரும்ப வரவில்லையாம். எனவே அத்தனை பேரிடமும் பணம் வாங்கிக் கொண்டு இவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் இந்த நடிகர் பலமுறை அமெரிக்கா போயுள்ளாராம். போகும்போதெல்லாம் கூடவே சிலர் அவருடன் செல்வார்களாம். எனவே இந்த நடிகரை மிகப் பெரிய அளவில் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்க தூதரகம், காவல்துறை ஆணையரை வலியுறுத்தியுள்ளதாம்.
பிரமாண்ட இயக்குநரும்!
இதேபோல முக்கிய இயக்குநர் ஒருவரும் இந்தப் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர் ஒரு பிரமாண்ட இயக்குநர். பிரமாண்டமான பட்ஜெட்டில்தான் படமே எடுப்பார்.
இவர் மீதும் ஆள் கடத்தல் சர்ச்சை எழுந்துள்ளது. லேட்டஸ்டாக இவர் கொடுத்த ஹிட் படத்தின் ஷூட்டிங்குக்காக அடிக்கடி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது கூடவே சிலரும் சென்றனராம். ஆனால் அவர்கள் திரும்பி வரவில்லையாம். இவர் குறித்தும் விசாரிக்குமாறு அமெரிக்க தூதரகம் காவல்துறையை கேட்டுக் கொள்ளும் என்று தெரிகிறது.
அமெரிக்க துணைத் தூதரகம் கொடுத்துள்ள பட்டியலில் உள்ள நடிகர், நடிகைகள் குறித்த புகார்களை முதலில் ரகசியமாக விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. அதில் உண்மை இருந்தால் நேரடியாக அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறும், தவறு செய்தவர்கள் மீது கடும் தண்டனை எடுக்குமாறும் அமெரிக்க துணைத் தூதரகம் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.
புளோராவுக்கு வாந்தி, பேதி!..
இதற்கிடையே விசா மோசடி வழக்கில் சிக்கி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள புளோரா, சிறை சூழலுடன் ஒத்துப் போக முடியாமல் பெரும் அவதிப்படுகிறாராம்.
சிறை சாப்பாடு அவருக்கு சற்றும் ஒத்துக் கொள்ளவில்லையாம். இதனால் அவருக்கு வாந்தி, பேதியாகி விட்டதாம். சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை கொடுத்துள்ளார்களாம்.
அவரும், ஸ்ரீலதாவும் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனராம்.
இரவெல்லாம் தூங்க முடியாமல் வேதனைப்படும் புளோரா, கண்ணீரும், கம்பலையுமாக நிமிடங்களைக் கழித்து வருவதாக கூறப்படுகிறது.
ஜாமீன் கோரி புளோரா தாக்கல் செய்துள்ள மனு இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











