சக்சேனா மீது புகார் கொடுத்த விநியோகஸ்தர் வீட்டில் வருமான வரி ரெய்டு!!

சேலம் -நாமக்கல் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க பொருளாளராகவும் பிரபல விநியோகஸ்தராகவும் இருப்பவர் செல்வராஜ்.
தீராத விளையாட்டுப் பிள்ளை பட விவகாரத்தில் சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா தனக்கு ரூ 83 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் தராமல் மோசடி செய்ததாக இவர் சென்னை கேகே நகர் போலீஸில் புகார் கொடுத்தார்.
இதை விசாரித்த போலீசார் சக்சேனாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கோவை வருமான வரித்துறை அதிகாரிகள் சேலம் வந்தனர்.
அவர்கள் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே வசிக்கும் செல்வராஜின் வீட்டிற்கு சென்றனர். செல்வராஜிடம் உங்களிடம் விசாரிக்க வேண்டும் என கூறி அவரிடம் சம்மனை கொடுத்தனர். இதை வாங்கி பார்த்த செல்வராஜ் விசாரணைக்கு ஒத்துக்கொண்டார்.
இதன் பின்னர் செல்வராஜிடம் கோவை மண்டல வருமான வரித் துறை துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் விசாரணை செய்தனர். இந்த விசாரணை முடிந்ததும், செல்வராஜின் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சென்று விசாரித்தனர். பின்னர் அவரது வீடு, அலுவலகங்களில் சோதனையிலும் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
அப்போது சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்தனர். இதன் பின்னர் சினிமா வினியோகஸ்தர் செல்வராஜை சேலத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கூறிய தகவல்களை அதிகாரிகள் குறித்து வைத்துக் கொண்டனர்.
இதன் பின்னர் செல்வராஜை அதிகாரிகள் அனுப்பி வைத்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











