'என் மீது தவறில்லை...'- கமிஷனிரிடம் ராம நாராயணன் பதில் மனு

கேபிள் டி.வி.களுக்கு சினிமா பாடல்கள், நகைச்சுவை காட்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கியதில் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.1 கோடியே 80 லட்சம் ஊழல் நடந்துள்ளதாக போலீஸ் கமிஷனரிடம் 60 தயாரிப்பாளர்கள் நேற்று மனு கொடுத்தனர்.
இதற்கு பதில் அளித்து தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் ராமநாராயணன் போலீஸ் கமிஷனரிடம் அளித்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக கேபிள் தொலைக்காட்சிகளுக்கு திரைப்படப் பாடல்கள் மற்றும் காட்சிகள் விநியோக உரிமை கொடுப்பது குறித்து ஒரு புகார் மனு தங்களிடம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன் மற்றும் சில தயாரிப்பாளர்கள் அளித்ததாக தொலைக்காட்சி செய்தி வாயிலாக தெரிந்து கொண்டேன்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கடந்த 2007 முதல் 2011 மே மாதம் வரை பொறுப்பிலிருந்தேன். அந்த சமயத்தில் எந்தவித முறைகேடும் எனக்கு தெரிந்த வரையில் நடைபெறவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 11.09.2011 அன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அண்ணா சாலை, பிலிம் சேம்பர் கட்டிடத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இந்த விவரம் குறித்து (கேபிள் டி.வி. விநியோக உரிமம்) உறுப்பினர்கள் விவாதித்தனர்.
அதற்கு பதில் அளித்து பேசிய எஸ்.ஏ. சந்திரசேகரன் என்னை குறிப்பிட்டு சொல்லும் போது இராம.நாராயணன் எந்தவித முறைகேடும் செய்யவில்லை. அவர் நல்லவர் என்று விளக்கம் அளித்துள்ளார். அது பதிவாகி உள்ளது. மேலும் நான் தலைவர் பொறுப்பில் இருந்த போது அவர் துணைத் தலைவராக இருந்தார்.
ஆகவே நான் எந்த முறைகேடும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது வேண்டுமென்றே பொய்ப் புகார்கள் தெரிவிப்பவர்கள் மீது நான் தகுந்த சட்டரீதியான நடவடிக்கைகளை மேற் கொண்டு என்னை சட்டத்தின் துணைக் கொண்டு தற்காத்துக் கொள்வேன் என்பதனை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். நான் குற்றமற்றவன் என்பதனை தாங்கள் தீர விசாரித்து முடிவு எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
-இவ்வாறு ராம நாராயணன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











