அடுத்த புதுப்பேட்டையா வர வேண்டிய படம்.. ரிலீசாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. எங்கே சறுக்கியது என்.ஜி.கே?
சென்னை: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படம் ரிலீசாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது.
Recommended Video
சூர்யாவின் ரசிகர்கள் #1YearOfCultNGK என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
விஜய்யின் சர்கார், அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்.ஜி.கே மூன்றும் 2018ம் ஆண்டு தீபாவளிக்கு மோதுவதாக அறிவிக்கப்பட்டு பின்னர், சில கால தாமதங்களால், விஸ்வாசம், என்.ஜி.கே பின்னர் ரிலீசாகின.

ஏகப்பட்ட எதிர்பார்ப்பு
என்.ஜி.கே படத்தின் லுக், மீண்டும் செல்வராகவன் புதுப்பேட்டை படத்தை போல ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு, முதல்வராக நடிக்கிறார் சூர்யா என்ற விளம்பரம் என என்.ஜி.கே படம் ரிலீசுக்கு முன்பு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை பெற்றது. ரிலீசுக்கு பின்னரும், சூர்யாவின் ஆக்ரோஷ நடிப்பால், அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தையே கொடுத்தது.

எங்கே சறுக்கியது
சூர்யா தனது நடிப்பால் பின்னி எடுத்து இருந்தாலும், செல்வராகவன் எங்கோ ஓர் இடத்தில் விட்ட தவறு தான், என்.ஜி.கே படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வி பட பட்டியலில் இணைய காரணம் ஆனது. அதுமட்டுமின்றி, ஆர்.ஜே. பாலஜியின் எல்.கே.ஜி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரியா ஆனந்த் கதாபாத்திரம், ரகுல் ப்ரீத் சிங்கின் கதாபாத்திரத்திற்கும் என்.ஜி.கே படத்திற்கு பெரிய வேட்டு வைத்து விட்டதாக சமூக வலைதளத்தில் கருத்துக்கள் பரவின.

ஏகப்பட்ட ‘கட்’
என்.ஜி.கே படம் தணிக்கை செய்யப்பட்டு, பல இடங்கள் வெட்டப்பட்டதா, அல்லது அவசர அவசரமான எடிட்டிங்கில் பல காட்சிகள் நீக்கப்பட்டதா என்பதே கேள்விக்குறியாகி இருக்கிறது. சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என பலரது நடிப்பால் மிளிர வேண்டிய என்.ஜி.கே சில போஸ்ட் புரொடக்ஷன் தவறுகளால் சறுக்கியது என்றுதான் சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
விமர்சனங்கள் எப்படி வேண்டுமானாலும், இருக்கட்டும் ஆனால், சூர்யா ரசிகர்களுக்கு இந்த என்.ஜி.கே நிச்சயம் ஒரு கல்ட் கிளாசிக் படம் தான். சமூக சேவை செய்யும் இளைஞன் அரசியல்வாதியாகி முதல்வர் நாற்காலியில் அமர எப்படியெல்லாம் அமாவாசை கதாபாத்திரத்தை போல அரசியல் செய்ய வேண்டும் என்பதை என்.ஜி.கே தெளிவாக விளக்கி இருக்கும்.

வசூலில் குறைவில்லை
நடிகர் சூர்யாவுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ரசிகர்கள் கூட்டம் என்.ஜி.கே படத்தின் மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சனங்களையும் மீறி தியேட்டரில் கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்த்து, பத்து நாட்களுக்குள்ளே 100 கோடி வசூல் சாதனையை செய்து அசத்தினர். அடுத்ததாக சூரரைப் போற்று படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.

முதல்முறையாக
பிரம்மாண்ட கட்-அவுட் வைக்கப்பட்டு தியேட்டர்களை திருவிழா கோலமாக சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே படத்தின் ரிலீஸின் போது அமர்க்களப்படுத்தினர். அதுமட்டுமின்றி, முதல்முறையாக தென் கொரியாவில் வெளியான முதல் தமிழ் திரைப்படம் என்ற அந்தஸ்த்தையும் என்.ஜி.கே பெற்றது. எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்தை மையமாக வைத்து என்.ஜி.கே என்ற படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











