2016 பொங்கல்: தாரை தப்பட்டையுடன் மோதும் சூர்யா
சென்னை: 2016 பொங்கலுக்கு பாலாவின் தாரை தப்பட்டை படமும், சூர்யாவின் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் 24 படமும் வெளியாகிறது. இதன் மூலம் பாலாவின் தாரை தப்பட்டையுடன் மோதவிருக்கிறார் சூர்யா.
சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியிருக்கும் தாரை தப்பட்டை படத்தை பாலா இயக்கியிருக்கிறார்.

கரகாட்டத்தை களமாகக் கொண்டு மண் வாசனையுடன் தாரை தப்பட்டை திரைப்படத்தை சசிகுமார் தயாரித்திருக்கிறார்,படத்தின் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் படத்தை கைப்பற்றியிருக்கும் ஐங்கரன் நிறுவனம், 2016ல் பொங்கலின்போது தாரை தப்பட்டையை வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறது.
மற்றொருபுறம் சூர்யா, சமந்தா, நித்யாமேனன் மற்றும் சரண்யா பொன்வண்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் 24 படத்தை, சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார்.
யாவரும் நலம் விக்ரம் குமார் இயக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.சூர்யாவின் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இதன் மூலம் இருவரின் படங்களும் பொங்கலுக்கு நேரடியாக மோதவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மோதலில் மேலும் எத்தனை படங்கள் இணையப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











